பொறுக்கிகளை நொறுக்கிய போலீஸ் அண்ணாமலை-மரியாதையாக புரிஞ்சுக்குங்க-அமைச்சர் அன்பரசனுக்கு பாஜக வார்னிங்
சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால் தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனை கைது செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தமிழக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பேசினார்.
இதில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன் கண்ட பொறுக்கிகள் எல்லாம் நமது ஆட்சியை பற்றி பேசுகிறார்கள். அண்ணாமலை ஐ.பி.எஸ் ஆக இருந்து ரவுடிகளை பிடித்து சிறையில் அடைக்காமல் பாஜகவில் சேர்த்துள்ளார். அதிமுகவினர் அதிகம் கொள்ளையடித்துள்ளதால் வழக்கிற்கு பயந்து வேகமாக செயல்படாமல் உள்ளனர்.

சுண்ணாம்பு போடுவோம்
அன்று முற்றுகை போராட்டத்தின்போது போலீசார் அண்ணாமலையைத் தேடினால் ஆட்டோவில் ஏறி ஓடிவிட்டார். ஒருவாரம் சிறையில் அடைத்தால் கட்சி வேண்டாம் என்று ஓடிவிடுவார்கள். நாங்கள் எல்லாம் சிறை என்றால் பெட்டியை தூக்கிக் கொண்டு போய்விடுவோம். ரொம்ப ஆட்டம்போட்டால் வாலை ஒட்ட அறுத்து சுண்ணாம்பு போட்டுவிடுவோம் என பேசியிருந்தார். அமைச்சர் அன்பரசனின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

கொலை மிரட்டலா?
இது தொடர்பாக நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழக அமைச்சர் அன்பரசன் @narendramodi
அவர்களையும், பாஜக தலைவர் @annamalai_k அவர்களையும் ஒருமையில் பேசியுள்ளதோடு, 'வாடா போடா' என்றும், பொறுக்கி என்றும், அதிகம் பேசினால் அவரை 'ஒழித்து கட்டுவேன்' என்று கொலை மிரட்டல் விடுத்திருப்பதும், தன் கட்சி தொண்டர்களிடம் விட்டால் 'நாறி போய் விடும் ஜாக்கிரதை' என்றும் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அய்யய்யோ கொல்றாங்களே..
ஒருமையில் பேசவும், 'வாடா போடா' என்றும், 'பொறுக்கி' என்றும் ரௌடிகளை போல் பாஜகவினருக்கும் பேச தெரியும். ஆனால் பேசமாட்டார்கள். ஆனால் அப்படி பேசும் பொறுக்கிகளை நொறுக்கி தள்ளிய போலீஸ் தான் அண்ணாமலை என்பதை அன்பரசன் 'மரியாதையாக' புரிந்து கொள்வது நல்லது. "ஒரு வாரம் தூக்கி உள்ளே வைத்தால் கட்சியும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று போய் விடுவான் என்றும் நாங்கள் எல்லாம் அப்படி இல்லை. ஜெயிலுக்கு பெட்டியை தூக்கி கொண்டு கிளம்பி விடுவோம்" என்றும் அன்பரசன் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது. "அய்யய்யோ கொல்றாங்களே, அய்யய்யோ கொல்றாங்களே" என்ற வீர வசனத்தை பேசியது யார் என தி மு க வினர் மறந்து விட வேண்டாம்.

கைது செய்யுங்க- டிஸ்மிஸ் செய்யுங்க
தமிழக அமைச்சர் ஒருவர் அநாகரீகமாக பேசி பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அமைச்சராக நீடிக்கும் தகுதியை இழந்து விட்ட அந்த நபரை முதல்வர் திரு. @mkstalin அவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். பிரதமர் குறித்து அவதூறாக பேசியதற்காகவும், அண்ணாமலை அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த காரணத்திற்காகவும் ரௌடித்தனமாக பேசிய அமைச்சர் அன்பரசனை கைது செய்து உரிய தண்டனை பெற்று தர வேண்டியது @CMOTamilnadu மற்றும் தமிழக காவல்துறையின் @tnpoliceoffl பொறுப்பு மற்றும் கடமை. தமிழக காவல் துறை இது போன்ற கொலை மிரட்டல்களை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக்கூடாது. இதை வேண்டுகோளாக எடுத்துக்கொண்டாலும் அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டாலும் உடனடி நடவடிக்கை தேவை. இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications