தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மகனுக்கு கொரோனா.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!
சென்னை: தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமெடுத்துள்ளது... நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 33,075 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்... வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட 2,31,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

முதியவர்களை மட்டுமே முதல் அலை தாக்கி வந்த நிலையில், இந்த 2-ம் அலை கர்ப்பிணிகள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது..
சாமானிய மக்களை கடந்து அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள், உட்பட பலதுறை சேர்ந்த பிரமுகர்களையும் தாக்கி வருகிறது.. சமீபத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதைத்தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் எல்.முருகனின் இளைய மகனுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.. இந்த தகவலை எல்.முருகனே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் "எனது இளைய மகன் இந்திரஜித்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது... கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். எனக்கும், எனது மூத்த மகன் மற்றும் மனைவிக்கும் பரிசோதனை முடிவில் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளது. எனினும், நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications