அண்ணாமலை டெல்லி பயணத்தில் தந்த " பயங்கர ஆதாரம்"- ஷாக்கான 'பாஜக' மேலிடம் திருப்பி கொடுத்தது பாருங்க!
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்ற போது என்ன நடந்தது என்பதை பற்றி விவரித்துள்ளார் அக்கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து திடீரென பாத யாத்திரையை ஒத்திவைத்துவிட்டு அண்ணாமலை டெல்லி சென்றார்.

அண்ணாமலையின் பேச்சுகளால்தான் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது; அதனால்தான் பாஜக தேசிய தலைமை அவரை உடனே டெல்லிக்கு வரவழைத்தது என கூறப்பட்டது. டெல்லி சென்ற அண்ணாமலையை பாஜக தலைவர்கள் சந்திக்க மறுத்தனர்; அதனால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை மட்டும் அண்ணாமலை சந்தித்தார் எனவும் தகவல்கள் தெரிவித்தன.
தலைவர் பதவி மாற்றம்?: டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலையும் இரவெல்லாம் காத்திருந்த செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் போனதால் இந்த யூகங்கள் அப்படியே உயிர்ப்புடன் இருந்தன. அத்துடன் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படலாம் எனவும் செய்திகள் வலம் வந்தன.
வாய்ப்பூட்டு போட்ட டெல்லி தலைமை: இதன் பின்னரும் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது விலகியதுதான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். ஆனாலும் பாஜக தலைவர்கள் இதுபற்றி எதுவும் பேசாமல் கனத்த மவுனம் காத்தனர். இது குறித்து யூடியூப் சேனலுக்குப் பேட்டி அளித்த பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏவும், எங்களுடைய தேசிய தலைமை கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது என சொல்லி இருப்பதால் நாங்கள் அமைதி காக்கிறோம் என்றார். இதனால் அண்ணாமலையின் டெல்லி பயணம் குறித்த மர்மம் நீடித்தது.

டெல்லியில் நடந்தது இதுதான்.. : இந்நிலையில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அண்ணாமலையின் டெல்லி பயணம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் கூறியிருப்பதாவது: அண்ணாமலையை தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என யார் சொன்னது? யாரிடம் சொன்னார்கள்? ஊடகங்கள் கிளப்பிவிட்ட மிகப் பெரிய பொய் இது. டெல்லிக்கு போனார் அண்ணாமலை என்னாச்சு? அண்ணாமலை மீது பாஜக மத்திய தலைமைக்கு மிகப் பெரிய மரியாதை, நம்பிக்கை, 100க்கு 100 மார்க்கில் இருந்து கொண்டிருக்கிறார். இவர்கள் கிளப்பிவிட்ட புரளியினாலே அங்கே போய்விட்டு வந்த போது 100க்கு 200 மார்க் ஆக உயர்ந்துவிட்டது. அண்ணாமலையின் சொல், செயல், ஆதாரங்கள் எல்லாவற்றையும்- தமிழ்நாட்டில் நடப்பதை எல்லாம் அங்கே காண்பித்த உடனேயே மத்திய தலைமை அவர் மீது மீண்டும் பாசத்தை கொடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறது. மிகுந்த நம்பிக்கையோடு வந்துள்ளார் அண்ணாமலை. இது என்ன காங்கிரஸ் கட்சியா? காலையில் ஒரு தலைவர்; மாலையில் ஒரு தலைவர்; ராகுலுக்கு வேண்டியவர் ஒரு தலைவர்; சோனியாவுக்கு வேண்டியவர் ஒரு தலைவர் என இருக்கிற கட்சி அல்ல இது. லட்சியத்தின் உச்சத்தில் இருக்கிற கட்சி பாஜக. இவ்வாறு எஸ்.ஆர்.சேகர் கூறினார்.












Click it and Unblock the Notifications