உங்க அதிகாரத்தை காட்டுங்க.. ஆளுநருக்கே லெட்டர் போட்ட அண்ணாமலை.. உளவுத்துறை ஏடிஜிபி மீது புகார்!
சென்னை: உளவுத்துறையின் கூடுதல் காவல்துறை இயக்குநராக உள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் மதுரையில் காவல் ஆணையராக இருந்தபோது 200 போலி பாஸ்போடுகள் வழங்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில், "41 வயது இலங்கை குடிமகன் கடந்த 2019ல் போலி ஆவணங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பாஸ்போர்டை கொண்டு இலங்கைக்கு விமானம் மூலமாக தப்பிச் செல்ல முயன்றார்.
அப்போது கைது செய்யப்பட்ட அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மதுரையில் போலி பாஸ்போர்ட் கிடைத்தது தெரியவந்தது.

போலி பாஸ்போர்
இதேபோல், 61 வயது நபர் ஒருவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மதுரையிலிருந்து துபாய்க்கு செல்ல முயற்சித்தபோது கைது செய்யப்பட்டார். இவ்விரு சம்பவங்களுக்கும் மத்தியில், கடந்த 2019 செப்டம்பர் 27 ஆம் தேதி போலி அடையாளம் காட்டி மதுரை அவனியாபுரம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இலங்கை அகதிகள் பாஸ்போர்ட் பெற்றதாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

காவல் அதிகாரிகள்
போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் வழங்கிய சமயத்தில் அவனியாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு, உளவுத்துறை காவல் ஆய்வாளர் தர்மலிங்கம், உதவி ஆணையர் சிவகுமார், மதுரை காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் பணியில் இருந்தனர். இந்த போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டதில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆணையரின் பங்கு முக்கியமான ஒன்று.

16 பேர் கைது
இதுவரை இந்த வழக்கு தொடர்பாக உளவுத்துறை கியூ பிரிவு போலீசார் முதல் தகவலறிக்கையை மாற்றவில்லை. இதற்கு முட்டுக்கட்டை போடப்பட்டு இருக்கலாம். இந்த வழக்கை சிபிஐ விசரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு, 175 பேரை விசாரித்து, 22 பேரை குற்றவாளிகள் என கண்டறிந்தது, 3 காவல் அதிகாரிகள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டதாக விளக்கமளித்தது.

டேவிட்சனை விசாரிக்க கடிதம்
அரசின் விளக்கத்தை கேட்ட நீதிமன்றம் சிபிஐ விசாரணை வேண்டாம் என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் சந்தேகப்படும் படியான நபர்களை குற்றப்பத்திரிகையில் சேர்க்க, நீதிமன்ற உத்தரவின்படி, உளவுத்துறை ஐஜி ஈஸ்வரமூர்த்தியின் அலுவலகத்திலிருந்து தொடர்புடைய துறைகளுக்கு கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் டேவிட்சன் தேவாசிர்வாதத்தையும் விசாரிக்கக்கோரி உள்துறை செயலாளர், டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

முடக்கம்
உள்துறை செயலாளரும் டேவிட்சனிடம் இந்த வழக்கு குறித்த ஆவணங்களை ஒப்படைக்குமாறு கடிதம் அனுப்பினார். ஆனால், முன்னேற்றம் இல்லை. பாஸ்போர்ட் துறை மற்றும் தபால்துறையினர் ஒப்புதல் அளித்தும், டேவிட்சன் தேவாசிர்வாதம் மூத்த காவல் அதிகாரிகள் மீதான விசாரணைக்கு ஒப்புதல் தராததால் வழக்கு முடங்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட நபர்களால் இந்த வழக்கில் வெளிப்படைத் தன்மை இல்லை. இந்த தாமதத்தால் வழக்கின் ஆதாரங்கள் அழிக்கப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

கறைபடிந்த அதிகாரி
தேசிய பாதுகாப்பு விசயத்தில் நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடுவை ஏடிஜிபி தேவாசிர்வாதம் மீறி இருக்கிறார். போலி பாஸ்போர்ட் பெற்றவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் மதுரை காவல் நிலையம் அருகில் இருப்பது சாதாரண விசயமல்ல. மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசிர்வாதத்தின் ஒப்புதல் இன்றி கீழே இருப்பவர்கள் இதை செய்திருக்க மாட்டார்கள். மாநில உள்துறையை கறைபடித்த அதிகாரியிடம் திமுக அரசும், உள்துறை செயலாளரும் வழங்கியுள்ளார்கள்.

ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்
டேவிட்சன் தேவாசிர்வாதம் மதுரை மாநகர ஆணையராக இருந்தபோது 200 க்கும் அதிகமான போலி பாஸ்போடுகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த விசயத்தில் உடனடியாக நீங்கள் தலையிட்டு அரசுக்கு உரிய அறிவுறுத்தை வழங்க வேண்டும். குறிக்கீடுகள் இன்றி காவல் அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்திட வேண்டும். தேசிய பாதுகாப்பை மனதில் வைத்து என்.ஐ.ஏ. அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உங்கள் அதிகாரத்தை பயன்படுத்துங்கள்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications