உயிருக்கு ஆபத்தா?.. அண்ணாமலைக்கு "ஒய் பிளஸ்" பாதுகாப்பு..??
அண்ணாமலைக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: பாஜக துணை தலைவர் அண்ணாமலைக்கு ஒய்.பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் வரவுள்ளது... அதற்கான தீவிரத்தில் பாஜக இறங்கி உள்ளது.. அதிமுக, திமுகவை விட இந்த முறை பாஜகதான் அதிக அளவு மும்முரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் தமிழக பாஜகவின் துணை தலைவரான அண்ணாமலைக்கு திடீரென "ஒய் பிளஸ்" பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
3 மாதங்களுக்கு ஒருமுறை கூடும் மத்திய ஆய்வு குழு, யார் யாருக்கெல்லாம் அச்சுறுத்தல்கள் உள்ளன, எந்த மாதிரியான அச்சுறுத்தல்கள் உள்ளன என்பதையெல்லாம் ஆய்வு செய்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில், அண்ணாமலையின் உயிருக்கு பயங்கரவாதிகள் மற்றும் மாவோயிஸ்ட்களால் ஆபத்து இருப்பதாக மாவட்ட போலீஸ் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளதாம்.
இதன் பேரிலேயே தமிழக போலீசின் பாதுகாப்பு சீராய்வு குழுவினர் (SRC) அண்ணாமலைக்கு உயர்மட்ட பாதுகாப்பு அளிக்க முடிவு செய்திருப்பதாக ஒரு செய்தியை நியூஸ் செவன் பிரைம் வெளியிட்டுள்ளது. அதாவது இவர் எங்கு தங்கியிருக்கிறாரோ, அங்கேயே 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்... அதேபோல, அண்ணாமலை எங்கே போனாலும், இந்த பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்லும்வகையில், 2 தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் செல்வார்கள்.. இவர்களை பிஎஸ்ஓ என்று சொல்வர்.
இவர்களில் ஒருத்தர் யூனிபார்மில் இருப்பார், இன்னொருத்தவர் சாதாரண டிரஸ்ஸில் இருப்பார்.. அண்ணாமலையுடன் இவர்கள் எப்போதுமே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது... சுழற்சி முறையில் துப்பாக்கி தாங்கிய 6 போலீசார் அவருக்கு 24 மணி நேரமும் இந்த பாதுகாப்பை வழங்குவார்கள். எந்தெந்த மாவட்டத்துக்கு அண்ணாமலை செல்கிறாரோ, அந்தந்த மாவட்ட காவல்துறை இந்த பாதுகாப்பை வழங்கும்..!