பரபரப்பில் பாஜக.. கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் உயர் நிலைக் கூட்டம்.. ஆலோசிக்க போவது என்ன?
சென்னை: பாஜகவின் உயர்நிலைக் கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணியை முறித்த நிலையில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த உயர் நிலைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக- பாஜக கூட்டணி முறிந்துள்ளதால் அண்ணாமலைக்கு ஏகப்பட்ட பிரஷர் ஏற்பட்டு இருக்கிறது. பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுகள் சரியில்லை. அண்ணாமலை தொடர்ந்து அதிமுக தலைவர்களை விமர்சனம் செய்து வருகிறார். முக்கியமாக அதிமுகவின் மறைந்த தலைவர்களை தாக்கி பேசி வருகிறார். அவரின் பேச்சுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகிக்கொள்கிறோம் என்று அதிமுக அறிவித்தது.

இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அண்ணாமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அவர் யாரையும் சந்திக்கவில்லை. அங்கே வெறுமனே காக்க வைக்கப்பட்டார். அதன்பின் மறுநாள் அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். அதில்.. அதிமுக பாஜக கூட்டணி முறிவிற்கு என்ன காரணம்?
அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் என்ன சாதகம்? பாஜக தலைமையில் எப்படி கூட்டணி அமைப்பது? பாஜக தலைமையில் கூட்டணி அமைத்தால் என்னென்ன சாதகங்கள் ஏற்படும்? என்ற ரிப்போர்ட் ஒன்றை அண்ணாமலை அளித்துள்ளார். இதற்கான புள்ளி விவரங்களையும் கூட அவர் நிர்மலா சீதாராமனிடம் கொடுத்துள்ளார். ஆனால் இன்னொரு பக்கம் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு பாஜக தலைவர்களிடம் ஆலோசனைகளை மேற்கொண்டார்.
பாஜக தலைமையில் தனியாக கூட்டணி அமைத்தால் யாரெல்லாம் கூட்டணியில் இணைவார்கள், வாக்கு வங்கி எப்படி இருக்கும் என்று என்று ரிப்போர்ட் ஒன்றை தயார் செய்து உள்ளாராம். இதை டெல்லியிடமும் நிர்மலா சீதாராமன் கொடுத்துள்ளாராம். டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய அண்ணாமலையின் நடைபயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் மக்கள் நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, இன்று சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.
அண்ணாமலை வரும் முன்பே கூட்டம் தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் தாமதமாக அண்ணாமலை கூட்டத்திற்கு வருகை தந்தார். இதனிடையே, இன்று பிற்பகல் 2 மணியளவில் அண்ணாமலை தலைமையில் பாஜகவின் உயர் நிலைக் கூட்டம் அக்கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். பாஜக உயர்நிலைக் கூட்டத்தில் எது குறித்து ஆலோசிக்கப்படும்.. என்ன மாதிரியான முடிவுகளை அண்ணாமலை எடுக்க போகிறார் என்பது குறித்து பாஜக வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications