தமிழக பட்ஜெட் 2024: எந்த ரூல்ஸும் இல்லாமல் அனைத்து மகளிருக்கும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படுமா?
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட் இன்று தாக்கலாகும் நிலையில் அனைத்து பெண்களுக்கும் ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின் போது திமுக முக்கிய வாக்குறுதிகளை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தது. அதில் முக்கியமானது பெண்களுக்கு ரூ 1000 மகளிர் உரிமை தொகை.

இந்த நிலையில் தேர்தல் முடிந்து திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தது. முதல் முறையாக மு.க. ஸ்டாலின் முதல்வரானார். அவர் பதவியேற்ற தினமே பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய அம்சங்களுக்கு முதல் கையெழுத்திட்டார்.
அப்போதிலிருந்தே பெண்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை எப்போது என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த அறிவிப்பு வெறும் ஏட்டில் மட்டும் இருந்ததால் எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு தற்போது எதையும் நிறைவேற்றாமல் அமைதி காப்பதுதான் திமுகவின் வேலை என விமர்சனங்கள் எழுந்தன.
இந்த நிலையில் நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது தமிழகத்தின் நிதிநிலை சீரடைந்தவுடன் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றார். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளாகியும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு, 2023- 2024ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ 1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் தகுதியுள்ள பெண்களுக்கு அளிக்கப்படும் என பொடி வைத்து பேசியதால் எல்லா பெண்களுக்கும் கிடைக்காது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.
இதையடுத்து யாரெல்லாம் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் என்ற பட்டியலை தமிழக அரசு வெளியிட்டது. அதில் குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற தகுதி பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002ம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலை கடை அமைந்திருக்கும் விண்ணப்ப பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்.
குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த குடும்ப தலைவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார்.
திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்களும், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கும் மேல் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களுக்கு கிடைக்காது. ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிட அதிகமாக பயன்படுத்தும் குடும்பங்களாக இருந்தாலும் கிடைக்காது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை பெற விண்ணப்பிக்க முடியாது உள்ளிட்ட விதிகள் வகுக்கப்பட்டதால் எல்லா பெண்களாலும் ரூ 1000 உரிமைத் தொகையை பெற முடியவில்லை.
முதற்கட்டமாக 1 கோடி பெண்கள் இந்த உரிமைத் தொகை திட்டத்தை பெற தகுதியுடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ 1000 அவர்களுடைய வங்கிக் கணக்கில வழங்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து முதல் வாய்ப்பில் தவற விட்டோருக்கென மறுபரிசீலனை செய்யும் முகாமிலும் சிலர் தேர்வு செய்யப்பட்டு தற்போது தற்போது 1.1 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக சட்டசபையில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் அனைத்து பெண்களுக்கும் ரூ 1000 உரிமைத் தொகைக்கான அறிவிப்புகள் வருமா என எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இன்னும் இரு மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் மக்களின் மனம் குளிர இந்த திட்டம் அனைவருக்கும் விரிவுப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தங்கம் தென்னரசு நிறைவேற்றுகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications