கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.. உடல்களை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை : கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் சென்னையை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அவர்களின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து.. சென்னையை சேர்ந்த 3 பேர் உட்பட 7 பேர் பலி.. பரிதாபம்
கேதார்நாத் சோக சம்பவம்
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக யாத்ரீகர்கள் ஹெலிகாப்டர் மூலமாக ஏற்றிச் செல்லப்பட்டனர். பாட்டாவில் இருந்து கேதார்நாத்துக்கு யாத்ரீகர்களை ஏற்றிச்சென்ற ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வரின் சிறப்பு முதன்மை செயலாளர் அபினவ் குமார் தெரிவித்துள்ளார்.
3 தமிழர்கள்
இந்த விபத்தில், உயிரிழந்த 7 பேரில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த சுஜாதா, கலா, பிரேம் குமார் ஆகியோரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. அவர்களின் உடல்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்களது உடல்களை தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் வேதனை
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் உ விபத்தில் 7 பேர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழ்நாட்டைச் கலா ரமேஷ், பிரேம்குமார் வாஞ்சிநாதன், சுஜாதா பிரேம்குமார் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
உடல்களை சென்னை கொண்டு வர
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு உத்தரகாண்ட் மாநில அரசுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.