திடீரென ராஜ் பவனுக்கு பறந்த முதல்வர் ஸ்டாலின் வண்டி.. அங்கே ஆளுநரை பார்க்கலையா? - மேட்டர் என்ன?
சென்னை : முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென ஆளுநர் மாளிகைக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
நிலுவையில் மசோதாக்கள்.. ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்கும் முதல்வர் மு.க ஸ்டாலின்
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவோடு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நட்புறவோடு செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கூட கருணாநிதியின் சிலையை அவரை அழைத்து வந்து திறக்கச் செய்தார்.
வெங்கையா நாயுடு பிறந்தநாள்
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பிறந்தநாள் இன்று. வெங்கையா நாயுடு தனது 73வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவருக்கு இன்று காலை முதலே பல்வேறு அரசியல் தலைவலர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் வெங்கையா நாயுடு
இந்த பிறந்தநாளின்போது வெங்கையா நாயுடு சென்னையில் இருந்து வருகிறார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெங்கையா நாயுடு சென்னை கிண்டில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ் பவனில் தங்கியுள்ளார். இதையடுத்து அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இணக்கமான சூழல்
துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவோடு தொடர்ச்சியான நட்புறவைப் பேணி வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் நட்புடன் பழகிய தலைவரான வெங்கையா நாயுடுவை அழைத்தே சமீபத்தில் கருணாநிதியின் சிலையை சென்னையில் திறக்கச் செய்தார் ஸ்டாலின். வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டால் திமுக ஆதரவளிக்கும் என்ற நிலையும் இருந்தது.
மீண்டும் வேட்பாளர்
ஆனால், குடியரசுத் தலைவர் வேட்பாளர் வாய்ப்பு வெங்கையா நாயுடுவுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி துணை குடியரசுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய துணை குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவே மீண்டும் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகையில்
இந்நிலையில், இன்று நேரில் சென்று சந்தித்து வெங்கையா நாயுடுவை வாழ்த்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, ஆளுநர் மாளிகைக்குச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
ஆளுநரை சந்திக்க?
ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் என மீண்டும் கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த மாதம் ஒருமுறை ஆளுநர் மாளிகைக்குச் சென்று இதுதொடர்பாக ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், இதுவரை ஆளுநர் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில், இன்று ராஜ் பவன் சென்ற ஸ்டாலின், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.