சென்னையில் ஜனவரி 6 முதல் புத்தக கண்காட்சி...முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
சென்னை: சென்னையில் 45-வது புத்தக கண்காட்சி தொடங்குகிறது. ஜனவரி 6 முதல் 23-ந் தேதி வரை இப்புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. 45-வது புத்தக கண்காட்சி ஜனவரி 6ம் தேதி தொடங்குகிறது
ஜனவரி 6ம் தேதி மாலை 6 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தக கண்காட்சி தொடங்கி வைக்க உள்ளதாக பபாசி தெரிவித்துள்ளது.

நந்தனத்தில் 45 வது கண்காட்சி
புத்தக விரும்பிகளின் திருவிழாவாக கருதப்படும் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் என அனைத்து தரப்பினரையும் புத்தகக் கண்காட்சிக்கு ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பபாசி நிர்வாகிகள் சென்னை நந்தனம் ஓஎம்சிஏ மைதானத்தில் 45வது புத்தகக் கண்காட்சி 2022ம் ஆண்டு ஜனவரி 6ம் தொடங்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

வாசகர்கள் அனுமதி நேரம்
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற உள்ள இந்த புத்தக் கண்காட்யில் வாசகர்கள், பொதுமக்கள் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும், அலுவலக வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் அனுமதிக்கப்படுபவர் என பபாசி நிர்வாகிள் தெரிவித்தனர். புத்தகக் கண்காட்சியில் நடைபெறும் விழாவில் 2022ம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும் வழங்கி முதலமைச்சர் கவுரவிக்க இருப்பதாக தெரிவித்த நிர்வாகிகள் பபாசி வழங்கும் விருதுகளையும் அவர் வழங்குவார் என தெரிவித்தனர்.

கண்காட்சியில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு
புத்தகக் கண்காட்சியில் புத்தகங்கள் விற்பனை மட்டுமின்றி சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் கண்காட்சிக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்த முறையும் புத்தகங்களுக்காக 800 அரங்குகள் அமைக்கப்படும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த புத்தகக் கண்காட்சியில் புகழ்பெற்ற நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பாளர்கள், தமிழ், ஆங்கில மொழிகளில் வெளியிடும் உடல்நலம், இலக்கியம், கலை, அறிவியல், கணிதம், வரலாறு, தொழில்நுட்பம், உணவு, பொது அறிவு, விளையாட்டு புத்தகங்கள் கிடைக்கும். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சென்னை புத்தக கண்காட்சிக்கு வந்து பயனடைவது வழக்கம்.

பேருந்து, மெட்ரோ ரயிலில் செல்லலாம்
சைதாப்பேட்டைக்கும் தேனாம்பேட்டைக்கும் இடையில் உள்ள நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்திற்கு சென்னை மாநகரப் பேருந்தில் வருபவர்கள் நந்தனம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். அல்லது மெட்ரோ ரயிலில் வருபவர்கள் நந்தனம் மெட்ரோ நிலையத்தில் இறங்கி எளிதில் புத்தகக் கண்காட்சியை சென்றடையலாம். புறநகர் ரயில் வருபவர்கள் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்தி கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு வந்து சேரலாம். மேலும் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்டவைக்கு மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications