எங்கள் திட்டத்தை ஜனாதிபதியே புகழ்ந்தார்...! முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
சென்னை: அதிமுக அரசின் நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பாராட்டியதோடு, நாடளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போதும் அதனை அவர் குறிப்பிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற காவிரி கூக்குரல் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார். ஜக்கி வாசுதேவ் காவிரி கூக்குரல் என்ற பெயரில் தலைக்காவிரியில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பயணத்தை இன்றுடன் முடித்தார். அது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசு கடந்த 2011-ல் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். சுற்றுச்சுழலை காப்பதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்துவதாக கூறினார். மேலும், பவானி, நொய்யல், அமராவதி, வைகை ஆறுகளை மாசடையாத வகையில் புனரமைக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார்.
வேளாண்துறை மூலம் நடப்பு ஆண்டில் மட்டும் இரண்டரை கோடி பனை விதைகளை நட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் மரங்களை நட இளைஞர்களும், மாணவர்களும் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் ஜக்கி வாசுதேவ் முயற்சிக்கு தமிழக அரசு துணை நிற்கும் எனவும் உறுதியளித்தார்.
விழாவில் எந்த இடத்திலும் மறந்தும் கூட ஜக்கி வாசுதேவின் பெயரை முதல்வர் உச்சரிக்கவில்லை. சத்குருஜி..சத்குருஜி என்று மட்டும் தான் திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தார்.












Click it and Unblock the Notifications