அரசு ஊழியர்களுக்கு 2வது மகிழ்ச்சியான செய்தி.. அந்த பைலில் முதல்வர் போடப்போகும் கையெழுத்து... செம்ம!
சென்னை: அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு கைவிடுவதாக அறிவித்தார்.
அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்களில் சில அமைப்பினர் 22.1.2019 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்கள் பணியில் பாதிப்பு ஏற்பட்டது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் காரணமாக, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், மக்களின் நலனுக்காக பணியாற்றும் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும், நிர்வாக கட்டுப்பாட்டை நிலைநிறுத்தவும் சில நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.
அரசு ஊழியர்கள் கைது
அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்றாக, 7,898 அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இது தவிர, சாலை மறியல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17,686 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது 408 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், அவர்கள் அனைவருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே போன்று, 2,338 நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் மீளப் பணியமர்த்தப்பட்டனர்.
வழக்குகள் ரத்து
அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று மறப்போம், மன்னிப்போம் என்ற உயரிய கருத்தை மனதில் கொண்டு, வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது தொடரப்பட்டு, நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தையும் மாண்புமிகு அம்மாவின் அரசு கைவிடுகிறது" என்று முதல்வர் கூறியிருந்தார்.
வெள்ளிக்கிழமை அறிவிக்கிறார்
இந்நிலையில் மற்றொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளார். அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுதொடர்பான அறிவிப்பை நாளை வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓய்வு வயது 60ஆக உயர்வு
மாநில அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்துவதற்கான கோப்புகள் தற்போது முதல்வர் பழனிசாமியிடம் இருப்பதாகவும் விரைவில் கையெழுத்தாகும் என்றும் தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த வயது வரம்பு, கரோனா காலத்தில், கடந்த ஆண்டு 59 ஆக உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டு இது 60 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம், ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.