கொடநாடு மர்ம மரணம்.. முதல்வர் பழனிச்சாமிதான் முழுக்குற்றவாளி.. ஸ்டாலின் பகீர் குற்றச்சாட்டு!
கொடநாடு எஸ்டேட் கொலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் குற்றவாளி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: கொடநாடு எஸ்டேட் கொலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் குற்றவாளி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட் விவகாரம் தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள், செய்திகள் வெளியாகி வருகிறது.
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்மக் கொலைகளின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த இரண்டு நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் சில முக்கிய ஆவணங்களை வெளியிட்டார். இதுகுறித்து ஆவணப்படமும் அவர் வெளியிட்டார். இதுகுறித்து தற்போது ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
மர்ம பங்களா
ஸ்டாலின் தனது பேட்டியில், கொடநாடு பங்களா எப்போதும் மர்மம் நிறைந்ததாக இருந்துள்ளது. ஜெயலலிதா இருந்த போதும் சரி, அவர் இறந்த போதும் சரி, அந்த பங்களாவில் பல பிரச்சனைகள் இருந்தது. அங்கு இதுவரை பலர் மர்மமாக இறந்துள்ளனர். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர், பங்களா காவலாளி, சிசிடிவி ஆப்ரேட்டர் என்று எல்லா மரணங்களும் மர்ம மரணங்கள் ஆகும்.
ஆதாரம் வெளியாகி உள்ளது
இதோ இப்போது இந்த மர்ம மரணங்களுக்கு ஆதாரம் வெளியாகி உளது. இதுதொடர்பாக தான் தெஹல்காவின் செய்தி ஆசிரியர் விசாரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர். பல உண்மைகள் இதன் மூலம் வெளியே வர போகிறது. எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இந்த கொலையை செய்ததாக இதில் குற்றவாளியாக இருப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் முழுக்குற்றவாளி
இதுவரை எந்த குற்றச்சாட்டையும் முதல்வர் மறுக்கவில்லை. கனகராஜ் மற்றும் சயனை தனக்கு தெரியாது என்று முதல்வர் இதுவரை மறுக்கவில்லை. வெறுமனே தவறு செய்யாதது போல பேட்டி அளிக்கிறார். இதனால் இந்த மர்ம மரணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முழுக்குற்றவாளி எனத் தெரிகிறது. அவரை உடனே ஆளுநர் விசாரிக்க வேண்டும்.
என்ன தீர்வு
இதற்கு நீதி விசாரணை மட்டுமே தீர்வாக இருக்க முடியும். கொலை புகாரை நிரூபித்தால், முதல்வர் பழனிசாமி பதவி விலக தயாரா? இந்த சவாலை அவர் ஏற்றுக்கொள்வாரா? இந்த கொலையில் சசிகலா குடும்பத்தையும் விசாரிக்க வேண்டும். இது தொடர்பாக உடனடியாக முதல்வர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.