அத்தனை பணிகளுக்கு இடையில்.. நேராக கிளம்பி சென்ற முதல்வர்.. கட்டிப்பிடித்து கலங்கிய ராசா.. உருக்கம்
சென்னை: கடந்த 3 நாட்களாக மனைவியின் சிகிச்சைக்காக மருத்துவமனையிலேயே தங்கி இருக்கும் திமுக எம்பி ஆ. ராசாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று நேரில் சென்று சந்தித்தார்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கொரோனா தடுப்பு பணிகளை கவனிக்க மாவட்ட வாரியாக முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ளும் போதும் கூட அவர் கட்சி நிர்வாகிகளை சந்திப்பது இல்லை.
எதிர்க்கட்சிகள் வைக்கும் புகார்களுக்கு கூட பதில் அளிக்காமல் கொரோனா தடுப்பு பணிகளில் மட்டுமே கடந்த 3 வாரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் நேற்று திமுக எம்பி ஆ. ராசாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார்.

சந்திப்பு
திமுக எம்பி ஆ ராசாவின் மனைவி பரமேஸ்வரி குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இவர் சிகிச்சை பெற்று வருகிறார். மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு இவர் அவதிப்பட்டு வருகிறார்.

மருத்துவமனை
ஏற்கனவே சில மருத்துவமனைகளில் ஆ. ராசா மனைவி சிகிச்சை எடுத்தார். ஆனால் அங்கு கொடுக்கப்பட்ட கீமோதெரபி சிகிச்சையை இவரின் உடல் ஏற்றுக்கொள்ளாத நிலையில், தற்போது குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே ராசா கடந்த சில நாட்களாக அங்கு தங்கி மனைவியை கவனித்து வருகிறார்.

தேர்தல்
தேர்தலுக்கு பின் ராசா முழுக்க முழுக்க மருத்துவமனையில் இருந்து மனைவியை கவனித்துக்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று கொரோனா பணிகளுக்கு இடையில் திடீரென முதல்வர் ஸ்டாலின், எம்எல்ஏ உதயநிதி, ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் மருத்துவமனைக்கே நேராக சென்று ஆ. ராசாவை சந்தித்தனர்.

கலக்கம்
மூன்று நாட்களாக தொடர்ந்து மருத்துவமனையில் தங்கி இருந்த ஆ. ராசா, முதல்வர் ஸ்டாலினை பார்த்ததும் அவரை கட்டியணைத்து கலங்கி இருக்கிறார். ஆ. ராசாவின் மனைவியின் உடல்நிலை குறித்து விசாரித்த ஸ்டாலின், தேவையான உதவிகள் அனைத்தையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார். நம்பிக்கையாக இருங்கள், குணமாகிவிடுவார் என்று ஸ்டாலின் ராசாவிற்கு நம்பிக்கை அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications