அதிகாலையே “அலறல்”.. கார் மோதி இறந்த 4 மீனவ பெண்கள்! முதல்வர் ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சென்னை: விழுப்புரத்தில் மீன் வாங்கி கொண்டிருக்கும்போது கார் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டு இருக்கிறார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "விழுப்புரம் மாவட்டம் சாலைவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

விழுப்புரம் மாவட்டம், சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், கீழ்புத்துப்பட்டியில் உள்ள சந்திப்பு சாலையில் இன்று (16.07.2023) அதிகாலை 05.00 மணியளவில் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று மீன் வாங்க காத்துக் கொண்டிருந்த புதுக்குப்பம் மீனவ பெண்கள் மீது மோதியதில் திருமதி. கெங்கையம்மாள் (45) க/பெ. அஞ்சாபுலி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் திருமதி. லட்சுமி (வயது 45) க/பெ. வல்லத்தான் மற்றும் திருமதி. கோவிந்தம்மாள் (வயது 50) க/பெ. கிருஷ்ணன் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர் என்றும், என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி. நாயகம் (வயது 45) க/பெ. ராமலிங்கம், திருமதி. கேமலம் (வயது 46) க/பெ. மூர்த்தி, திருமதி. பிரேமா (வயது 45) க/பெ. நாகராஜ், ஆகியோருக்கு சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், பலத்த காயமுற்ற திருமதி. நாயகம் அவர்களுக்கு 1 இலட்சம் ரூபாயும், இலேசான காயத்துடன் சிகிச்சையில் உள்ள மற்ற இருவருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகம் என்ற பெண்ணும் முதலமைச்சரின் இந்த இரங்கல் அறிக்கை வெளியான பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications