“வேற லெவல்”.. ஏற்றமிகு 7 திட்டங்கள்! 70 வது பிறந்தநாளில் தமிழ் மக்களுக்கு “கிப்ட்” கொடுத்த ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டு நிறைவடைவதற்குள் பெண்களுக்கு இலவச பேருந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் என பல்வேறு திட்டங்களை ஸ்டாலின் அறிமுகம் செய்து இருக்கிறார்.
சென்னை: நாளை தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு துறைகள் சார்ந்து ஏற்றமிகு 7 திட்டங்களை தொடங்கி தமிழ்நாடு மக்களுக்கு பிறந்தநாள் பரிசளித்தார். அதில் குறிப்பாக திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு திட்டங்களை தொடங்கி அவர் செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக பெண்களுக்கு இலவச பேருந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து இருக்கிறார். அந்த வகையில் ஏற்றமிகு 7 திட்டங்களை அவர் தொடங்கி வைத்து உள்ளார்.

ஏற்றமிகு ஏழு திட்டம்
சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்றமிகு 7 திட்டங்களின் கீழ் பல்துறை துறைகளுக்கு உட்பட்ட புதிய திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். அதில் புதிய திட்டங்களின் தொடக்கம், அடிக்கல் நாட்டு விழா, பணி ஆணை வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

காலை உணவு திட்டம்
அதில் 1.ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
2. திருநங்கையர்களுக்கான மாதாந்திர உதவித் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் ஆணையை அவர் வழங்கினார்.
3.முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 500 மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தையும் அவர் அறிமுகம் செய்தார். கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் அன்று இந்த திட்டத்தை மதுரையில் உள்ள பள்ளிகள் தொடங்கிய ஸ்டாலின் இன்று சென்னையில் விரிவாக்கம் செய்து உள்ளார்.

44 மருத்துவமனை கட்டிடங்கள்
4. சுகாதாரத்துறை உட்பட பல்வேறு அரசுப் பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
5. ரூ.1,136 கோடி மதிப்பில் 44 பல்வேறு மருத்துவமனை கட்டிடங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அத்துடன் தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்டு உள்ள புதிய மருத்துவ கட்டமைப்பு திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தூய்மை பணியாளர்கள்
6. மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
7. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீனமயமாக்கி, தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை தொழில் முனைவோர்களாக ஒருங்கிணைந்து செய்வதற்கான சிறப்பு திட்டத்தினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்தார்.

அமைச்சர்கள் பங்கேற்பு
இந்த நிகழ்வில் தமிழ்நாடு நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications