பெரியார், கலைஞருக்கு கிடைக்காத வாய்ப்பு.. நல்லக்கண்ணு நூற்றாண்டு விழாவில் ஸ்டாலின் பேச்சு
சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய ஸ்டாலின், உங்களது வாழ்த்தை விட எனக்கு பெரிய ஊக்கம் எதுவும் இல்லை. பெரியார், கலைஞருக்கு கிடைக்காத வாய்ப்பு தோழர் நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். உயர்நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் நல்லக்கண்ணு என்று பேசினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர் நல்லக்கண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கொண்டாடப்பட்டது. பழ நெடுமாறன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின், திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது, தோழர் நல்லக்கண்ணு நூறு என்ற கவிதை புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் நல்லக்கண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கக்கூடிய சிறப்பு பாடலையும் ஸ்டாலின் வெளியிட்டார். தொடர்ந்து விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு எனது கம்பீரமான வணக்கம். கம்பீரமான வணக்கம் மட்டுமல்ல கம்பீரமான செவ்வணக்கம்.

உங்களது வாழ்த்தை விட எனக்கு பெரிய ஊக்கம் எதுவும் இல்லை. சமத்துவ சமுதாயத்தை மீட்க நமது பணியில் வெல்ல வாழ்த்துங்கள் என்று கேட்பதற்கே வந்துள்ளோம். நல்லக்கண்ணுவிடம் வாழ்த்து பெறவே வந்துள்ளேன். பெரியார், கலைஞருக்கு கிடைக்காத வாய்ப்பு தோழர் நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. 100 வயதை கடந்தும் அனைவருக்கும் வழிகாட்டியாக உள்ளார். பொதுவுடைமை, திராவிடம், தமிழ்த்தேசிய சிந்தனையாளர்கள் நிறைந்த மேடைஇது.
இயக்கம் வேறு, தான் வேறு என்று நினைக்காமல் வாழ்ந்து வருகிறார். உழைப்பால் கிடைத்த பணத்தை எல்லாம் கட்சிக்காகவே கொடுத்தார். அம்பேத்கர், தகைசால் தமிழர் விருதுக்கு கிடைத்த ரூபாயை கூட தமிழக அரசுக்கு திருப்பி அளித்தார். உயர்நீதிமன்றம் பாராட்டும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் நல்லக்கண்ணு. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications