உங்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின் சொன்னதுமே இளையராஜா கொடுத்த ரியாக்ஷன்
சென்னை: எல்லா எல்லைகளையும் கடந்தவர் இளையராஜா என முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். தாயாக தாலாட்டுகிறது, வலிகளை ஆற்றுகிறது இளையராஜாவின் பாடல்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார். மேலும் சங்க தமிழுக்கு இசை அமைத்து ஆல்பம் வெளியிட வேண்டும் என்று இளையாராஜாவிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.
சென்னையில் நடந்த இளையராஜா பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- இளையராஜா அவர்களுக்கு ஒட்டுமொத்த தமிழர்களின் சார்பாக எனது வாழ்த்தை தெரிவிக்கிறேன். பண்ணைபுரத்தில் இருந்து புறப்பட்டு, திறமையும் உழைப்பும் இருந்தால் எத்தகைய உயரங்களையும் அடைய முடியும் என்பதற்கே எடுத்துக்காட்டாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். அரை நூற்றாண்டு காலத்தில் ராஜாவின் பாடல்களை முனுமுனுக்காத உதடுகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது.

இந்த ராஜா மொழிகளை கடந்தவர்
இளையராஜா அவர்களின் இசை தாயாக தாலாட்டுகிறது, காதலின் உணர்வுகளை போற்றுகிறது, வெற்றி பயணத்திற்கு ஊக்கமளிக்கிறது, வலிகளை ஆற்றுகிறது. உண்மையில் சொல்ல வேண்டும் என்றால், இவர் இளையராஜா அல்ல, இணையற்ற ராஜா. ஒரு ராஜா இருந்தால் அவருக்கென நாடு இருக்கும், மக்கள் இருப்பார்கள், எல்லைகள் இருக்கும். ஆனால் இந்த ராஜா மொழிகளை கடந்தவர், எல்லைகளையும் கடந்தவர், எல்லாருக்குமானவர்.
இளையராஜாவுக்கு ஒரு கோரிக்கை
"இளையராஜா மட்டும் இசை அமைத்து இருந்தால் திருக்குறளும், நற்றிணையும், குறுந்தொகையும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுபத்தும், பரிபாடலும் எங்களுக்கு மனப்பாடம் ஆகியிருக்கும்" என்று ஒருவர் சமூக வலைத்தளத்தில் எழுதியிருந்தார்.
இளையராஜாவுக்கு, தமிழ் ஆர்வலரான நானும் ஒரு கோரிக்கை வைக்கிறேன். சங்கத் தமிழ் இலக்கியங்களுக்கு நீங்கள் இசை அமைத்து சில ஆல்பங்கள் வெளியிட வேண்டும். முதல்வரிடம் தான் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நான் உங்களுக்கு கோரிக்கை வைக்கிறேன். இசை ஆளுமையும், தமிழ்ப்புலமையும் கொண்ட நீங்கள் இந்த கடமையை செய்ய வேண்டும். "ராஜா கையை வைத்தால் அது ராங்கா போனது இல்லை" என்ற நம்பிக்கையோடு இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
பிறந்தநாளை மாற்றிக்கொண்டார்
இசையால் நமது நெஞ்சங்களை ஆளும் இளையராஜாவுக்கு பத்மபூஷண், பத்ம விபூஷண் போன்ற பட்டங்கள் இருந்தாலும், இசைஞானி என்ற பட்டம் பெயராகவே நிலைத்துவிட்டது. வரலாற்றில் எத்தனையோ மனிதர்கள் ஒரே பிறந்த நாளை கொண்டாடக்கூடியவர்களாக இருப்பார்கள்.
ஆனால் யாரும் இன்னொருவருக்காக தனது பிறந்த நாளை மாற்றிக்கொண்டது இல்லை. ஆனால் இசைஞானி, கலைஞருக்காக தனது பிறந்த நாளை ஜூன் 2ஆம் தேதி மாற்றிக்கொண்டார். அந்த வகையில் உள்ளத்திலும் உயர்ந்து இருக்கிறார் இளையராஜா.
பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
எனது மகள் செந்தாமரை நாட்டிய அரங்கேற்றத்தில் இளையராஜா பங்கேற்று வாழ்த்தினார். லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யப் போகிறார் என்ற செய்தி வந்தவுடன் அவரது வீட்டிற்கு முதல் ஆளாக சென்று பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தேன். ராஜாவும் சிம்பொனி அரங்கேற்றிய வெற்றிக்களிப்புடன் எனது வீட்டிற்கு வந்து என்னை பார்த்தார். இந்த அன்பிற்கு நான் கடமைப்பட்டவன்.
இசைத்துறையில் ஆர்வத்துடன் சிறந்த இசையை படைக்கும் திறமையான இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் இளையராஜா பெயரில் விருது வழங்கப்படும். அறிவிப்பு மட்டும் அல்ல, ஒரு கோரிக்கையும் வைக்கிறேன். இளையராஜாவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் என்ற ஆவலை தமிழ்நாட்டு மக்கள் மட்டும் இன்றி உலகெங்கும் உள்ள ராஜாவின் ரசிகர்கள் சார்பாக நான் கோரிக்கை வைக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications