வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியான 2 தமிழர்கள்.. உடனடியாக நிவாரண உதவி அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலியான தமிழகத்தைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலா ரூ. 3 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட 3 பெரிய நிலச்சரிவுகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு, சூரல்மலா, முண்டக்கை, மலப்புரம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது வரை 150-ஐ கடந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலரைக் காணவில்லை எனவும் அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதால் இரண்டாவது நாளாக இன்று மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூரைச் சேர்ந்த 34 வயதான காளிதாஸ், கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தார். இந்த சூழலில் சூரல்மலையில் நிகழ்ந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோல நிலச்சரிவில் வயநாடு மாவட்டம் சூரல்மலையில் பணியாற்றிய நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரங்கோடு பகுதியைச் சேர்ந்த கல்யாண குமார் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காளிதாஸ் மற்றும் கல்யாண் குமார் ஆகியோரின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
நிலச்சரிவில் பலியான காளிதாஸின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், உயிரிழந்த காளிதாஸின் குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அதேபோல நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்யாண குமார், நிலச்சரிவில் பலியான நிலையில், அவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளதோடு நிதி உதவி மூன்று லட்சம் ரூபாயை கல்யாண்குமார் குடும்பத்தினருக்கு நிவாரணமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றிவந்த நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திரு.கல்யாணகுமார் (வயது 52) த/பெ. முருகையா என்பவர் நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காலம்சென்ற கல்யாணகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். இந்த இயற்கை பேரிடரினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுக்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் உறுதியளிதார்.
மேலும், நிலச்சரிவால் கடுமையான பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டிலிருந்து இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன், இ.ஆ.ப., மற்றும் ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., ஆகியோர் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்பியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கென கேரள அரசுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 கோடியினை வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications