உதயநிதி ஸ்டாலினுக்கு 48வது பிறந்தநாள்.. உச்சிமுகர்ந்து முத்தமிட்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் உதயநிதி. அவரை உச்சிமுகர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுகவின் முக்கிய பிரச்சார முகங்களில் ஒருவராக தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று பணியாற்றினார் உதயநிதி. கையில் எய்ம்ஸ் செங்கல்லோடு அவர் செய்த பிரச்சாரம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. 40க்கு 39 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

2021 சட்டசபை தேர்தலிலும் தமிழ்நாடு முழுவதும் பம்பரமாகச் சுழன்று பணியாற்றிய உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாகவும் ஆனார். அதைத்தொடர்ந்து, 2022 ஆம் ஆண்டு இறுதியில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். அண்மையில் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகவும் பொறுப்பெற்றுச் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று தமது 48வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் மக்கள் நலப் பணிகளைச் செய்து கொண்டாடி வருகின்றனர்.
தமது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு சென்று கலைஞர் படத்துக்கு மரியாதை செலுத்தினார். வேப்பேரி பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக சென்னை சி.ஐ.டி நகரில் உள்ள முதல்வர் இல்லத்துக்குச் சென்று, தனது தந்தையும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் - தாய் துர்கா ஸ்டாலினிடம் பிறந்தநாள் வாழ்த்துகளையும், ஆசிகளையும் பெற்றுக்கொண்டார். அப்போது, முதல்வர் ஸ்டாலின், உதயநிதியை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழ்த்துத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், "உயிரையும், உடலையும் தந்தது மட்டுமின்றி தமிழ்நாட்டை நேசிக்கும் உணர்வையும் - அயராது உழைப்பதற்கான ஆற்றலையும் தந்து கொண்டிருக்கும் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடமும், ஈன்றெடுத்த அன்புத்தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டோம். எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையின் வாழ்த்தைப் பெற்று நம் பணிகளை தொடர்வதில் மகிழ்ச்சி கொள்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications