10 சட்டசபைத் தொகுதி, ஒரு ராஜ்ய சபா.. திமுகவை நெருக்க தயாராகும் விசிக.. ஸ்டாலின் முடிவு என்ன?
சென்னை: தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தொடர்ந்து திமுக கூட்டணியின் முக்கிய அங்கமாக இருக்கும் விசிகவும் ஒரு ராஜ்ய சபா சீட்டை கைப்பற்ற களத்தில் குதித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 10 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கேட்டு விசிக நெருக்கடி கொடுக்க தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக தரப்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மும்முரமாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே தவாக, ஐயூஎம்எல், மமக, முக்குலத்தோர் புலிப்படை, தமீமுன் அன்சாரி, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது. அதேபோல் மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது.

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே தொகுதி பங்கீடு முடிவடைந்துவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். நாளை விசிக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தொடங்க உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் 4 தொகுதிகளில் விசிக வென்றது.
இம்முறை விசிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. இதனிடையே ராஜ்ய சபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி இருக்கிறது. திமுகவுக்கு 4 ராஜ்ய சபா சீட் கிடைக்கும் என்பதால், தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் விசிகவும் ஒரு ராஜ்ய சபா சீட்டுக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வருகிறது.
திமுகவுடன் கொள்கை ரீதியாக விசிக துணை நிற்பதால், திமுக தலைமையும் அவர்களுக்கு அங்கீகாரத்தை வழங்க ஆலோசித்து வருகிறது. அதேபோல் வட மாவட்டங்களில் விசிக கட்டமைப்பு ரீதியாகவும் வலுவாக உள்ளது. இதன் காரணமாக 10 சட்டசபைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட்டை கைப்பற்ற திருமாவளவனுக்கு அக்கட்சியினரும் அறிவுறுத்தி வருகின்றனர்.
ஆனால் திமுக தலைமையோ, விசிகவுக்கு 8 சீட்கள் கொடுக்க முடிவு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை ராஜ்ய சபா சீட்டுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டால், அது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் ராஜ்ய சபா சீட் உடனடியாக வழங்கப்படுமா என்பதும் சந்தேகம் தான்.
ஏனென்றால் திருச்சி சிவா மற்றும் என்ஆர் இளங்கோ இருவரையும் மீண்டும் ராஜ்ய சபாவுக்கு அனுப்ப திமுக முடிவு செய்திருக்கிறது. இதனால் அடுத்த ராஜ்ய சபா தேர்தலில் விசிகவுக்கு ஒரு இடம் ஒதுக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் விசிக தொண்டர்கள் அதிக ஆர்வத்துடன் தொகுதி பங்கீட்டை எதிர்நோக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications