சபாஷ்.. ரூ. 2000 கோடியில் "நெய்தல் மீட்சி இயக்கம்".. கடல் அரிப்பை தடுக்க தமிழக அரசு அதிரடி
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்ட மக்களை மீட்க புதிய திட்டத்தை அறிவித்தார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
சென்னை: தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் காலநிலை மாற்றத்தால் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அரசு ஏற்கெனவே விரிவாக விளக்கியிருந்தது. இந்நிலையில் இந்த பாதிப்பிலிருந்து மக்களை மீட்க 'நெய்தல் மீட்சி இயக்கம்' எனும் இயக்கம் உருவாக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.
2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருக்கிறார். இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்து அவர் பேசுகையில் பல முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகள் வரை காலநிலை மாற்றம் குறித்த செய்திகள் நாளிதழின் கடைசி பக்கத்தில் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது இதுதான் பிரதானமாக உருவாகியிருக்கிறது. காரணம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நிகழ் காலத்திலேயே நாம் எதிர்கொள்ள தொடங்கியிருக்கிறோம் என்பதுதான்.
கடந்த ஆண்டு பிரிட்டனில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்கம் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தெளிவாக புரியவைத்தது. பிரிட்டன் ஒரு குளிர்ச்சியான நாடு. இந்நாட்டின் சராசரி வெப்பநிலை கோடைக்காலத்தில் 86 டிகிரியாக இருக்கும். ஆனால் கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் இந்நாட்டின் வெப்பநிலை 100 டிகிரியை தொட்டது. எனவே மக்கள் மட்டுமல்லாது பறவைகள், காட்டு உயிரினங்கள், நீர் வாழ் உயிரினங்கள் என அனைத்தும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டன.

வெள்ளம்
அதேபோல பாகிஸ்தானில் எற்பட்ட வெள்ளம் முக்கியமானதாகும். தற்போது அந்நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த வெள்ளம் மிக முக்கியமான காரணமாகும். எனவே காலநிலை மாற்றம் வளர்ந்த நாடுகளை விட வளர்ந்து வரும் நாடுகளை அதிகம் பாதிக்கும் என்பது நாம் கற்றுக்கொண்ட பாடமாகும். இப்படி இருக்கையில், இந்த காலநிலை மாற்றமானது இந்தியாவின் கடலோர மாவட்டங்களை கடுமையாக பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அந்த வகையில், சென்னைதான் இதில் அதிக பாதிப்புகளை எதிர்கொள்ளும். இது குறித்து சென்னை மாநகராட்சி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

கடல் நீர் பாதிப்பு
அதில், "காலநிலை மாற்றத்தால் சென்னையில் கடல்நீர் மட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 7 செ.மீ உயரும். இதன் காரணமாக 100 மீட்டர் நிலப்பகுதி கடலுக்குள் மூழ்கும். இப்படியே தொடர்ந்து கடல்நீர் மட்டம் அதிகரித்தால் 2100வது ஆண்டில் சென்னையின் 67 ச.கி.மீ கடல் நீரில் மூழ்கிவிடும். இது சென்னையில் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 16% ஆகும். இந்த அளவுக்கு தண்ணீர் உள்ளே வந்துவிட்டால் வடசென்னையின் 2 மின் உற்பத்தி நிலையங்கள், 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் ஆகியவை 60 சதவிகிதம் கடல்நீரில் மூழ்கிவிடும். 200க்கும் மேற்பட்ட குடிசை பகுதிகள், 10 லட்சம் மக்கள் இதனால் பாதிப்பை எதிர்கொள்வார்கள்.

சென்னை
இது மட்டுமல்லாது கடந்த 2015, 2021ம் ஆண்டுகளில் வந்த வெள்ளத்தை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வெள்ளம் ஏற்படும். இது சென்னையின் அன்றாட பணிகளை கடுமையாக பாதித்துவிடும். இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளும் கடுமையானதாக இருக்கும்" என்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்க புதிய திட்டத்தை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். அதன்படி ரூ.2000 கோடியில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது,

ரூ.2,000 கோடியில் திட்டம்
"பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும், கடலோர சுற்றுச்சூழல் மற்றும் கடரோல மக்களின் வாழ்வாதாரம் வரும் காலங்களில் பாதிக்கப்படும். கடல் அரிப்பை தடுக்கவும், கடல் மாசுபாட்டை தடுக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் 'தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்' உலக வங்கியின் ரூ.2000 கோடி நிதியுதவியுடன் உருவாக்கப்படும்" என்று கூறியுள்ளார். இந்த அறிவிப்பு சூழலியலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications