பறந்தது உத்தரவு.. இனி கலப்பட டீசல் விற்றால் "குண்டர்" சட்டம் பாயும்.. தமிழக அரசு அதிரடி
கலப்பட டீசல் விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
சென்னை: நாமக்கல் தொட்டிப்பட்டியில் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை ஏற்றி வந்த லாரி டிரைவர் மற்றும் ஓனரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அத்துடன், கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்பட்டு வருவதாக 26,400 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பயோடீசல் என்கிற பெயரில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக நிறைய புகார் மனுக்கள் வந்தன..
வெளிமார்கெட்டில் விற்பனை செய்யப்படும் டீசலின் விலையை விட 1 லிட்டருக்கு ஐந்து ரூபாய் குறைவாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்பட்டது..

கச்சா எண்ணெய்
நாடு முழுவதும் கச்சா எண்ணெயின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது... எனவே, இதற்கு மாற்றாக பயோடீசலை பயன்படுத்த நீண்டகாலமாக வாகன உரிமையாளர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

அரசாங்கம்
அரசாங்கமும் இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்யாத நிலையில், சில லாரி உரிமையாளர்கள் மண்ணெண்ணை, நேப்தா, பாலிதின் தின்னர், இதோடு எஞ்ஜின் ஆயில் போன்றவற்றை கலந்து பயோ டீசல் என்கிற பெயரில் விற்பனை செய்ய தொடங்கின.. இந்த டீசலை உபயோகித்தால் வாகனங்களின் ஆயுட்காலம் மிகவும் குறைவாகவே இருக்கும்... அதாவது 15 வருடத்துக்கு இயங்கக் கூடிய வாகனங்கள், அடுத்த ஏழே ஆண்டுகளில் பழுதாகி விடுமாம்...

டீசல்
இந்த வகை டீசலை விற்பனை செய்ய தற்போது வரை யாருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை. ஆனாலும் தைரியமாக நாமக்கல் மாவட்டத்தில் சாலை ஓரங்களில் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைத்துக் கொண்டு டேங்கர் லாரிகளில் இருந்து நேரடியாக லாரிகளுக்கு விற்பனை செய்வதாக ஏற்கனவே மற்றொரு புகாரும் சில மாதங்களுக்கு முன்பு கிளம்பியது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தீவிர சோதனை
"கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளான சேலம், சங்ககிரி, நாமக்கல், திருசெங்கோடு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் கலப்பட டீசல் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் டி.ஜி.பி.ஆபாஸ்குமார் உத்தரவுப்படி, போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டாலின், பாஸ்கரின் நேரடி மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் பல குழுக்களாக பிரிந்து மேற்படி பகுதிகளில் கலப்பட டீசல் வாகன சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

நடவடிக்கை
கடந்த 2 மாதங்களில் மட்டும் கலப்பட டீசல் சம்பந்தமாக மொத்தம் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 26 ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த டீசல் ஏற்றி வந்த 5 டேங்கர் லாரிகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் கடத்தல் செயலில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதில் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது கள்ள சந்தை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் தடுப்பு காவலில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலப்பட டீசல்
இதில் கடந்த 13-ந் தேதி அன்று சேலம் மாவட்டம் சங்ககிரி குப்பனூர் பிரிவு சாலையில் வாகன தணிக்கையின்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த டேங்கர் லாரியில் சுமார் 4 ஆயிரம் லிட்டர் அளவுள்ள கலப்பட டீசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவர் மதியழகன் (வயது 47), கிளீனர் செல்வம் (26) உரிமையாளர் திருப்பூரை சேர்ந்த இன்பராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கைது
அதேபோல் பொள்ளாச்சி கே.ஜி.சாவடி எட்டிமடை கே.பி.எஸ். குடோன் அருகில் 12-ந் தேதி வாகன சோதனையில் 4 ஆயிரம் லிட்டர் ஏற்றி வந்த லாரி மற்றும் வாகனங்களை ஓட்டி வந்த டிரைவர்கள் சபாபதி மற்றும் செல்வ கருப்பையா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் சேலம் கேது நாயக்கன்பட்டியில் கடந்த 5-ந் தேதி வாகன தணிக்கையில் 1,350 லிட்டர் ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாகன தணிக்கை
சேலம் சங்ககிரி முதல் எடப்பாடி ரோடு வாரி பேக்கரி முன்பு கடந்த 6-ந் தேதி வாகன தணிக்கையில் 17 ஆயிரத்து 50 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரிகளின் உரிமையாளர்களான ஆரோக்கியராஜ், கவுதம், சங்கர் மற்றும் பழனிசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் நாமக்கல் தொட்டிப்பட்டியில் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி 7 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை ஏற்றி வந்த லாரியின் ஒட்டுனர் மற்றும் உரிமையாளர் ஆனந்தராஜ், தமிழ்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல்
நாமக்கல் முத்தாலப்பட்டி பைபாஸ் ரோட்டில் வாகன தணிக்கையில் கடந்த 1-ந் தேதி 1,000 லிட்டர் கலப்பட டீசல் ஏற்றி வந்த லாரியின் டிரைவர் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். மேலும் சேலம் தேசிய நெடுஞ்சாலை பச்சபாளி ரோட்டில் 350 லிட்டர் கலப்பட டீசல் டேங்கரில் வைத்து அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக அங்கு செல்லும் வாகனங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வந்த டேங்கர் உரிமையாளர் முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து கலப்பட டீசல் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கடுமையான நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications