கரூரில் அடுத்த பிரம்மாண்டம்.. ஜூலை 10 நடக்கப்போவது என்ன?
ஒருகாலத்தில் தோல் பதனிடும் தொழிலுக்காக மட்டுமே அறியப்பட்ட தமிழ்நாட்டின் காலணி உற்பத்தி துறை, இன்று தோல் அல்லாத (Non-Leather) காலணி உற்பத்தியில் இந்தியாவின் மிகப்பெரிய சென்டராக உருவெடுத்து வருகிறது.
நைக், அடிடாஸ், புமா, க்ராக்ஸ், நியூ பேலன்ஸ், ரீபாக் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி மற்றும் கொள்முதல் இடமாக தமிழகத்தை மாற்றி வரும் நிலையில், கரூரில் அடிடாஸ் காலணிகள் தயாரிப்பு தொடங்கப்படுகிறது.

தமிழ்நாடு ஏற்கனவே இந்தியாவின் தோல் பதனிடும் திறனில் 60% பங்கு வகிக்கிறது. மொத்த காலணி மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் 38% பங்கு தமிழ்நாட்டுக்கு உள்ளது. இந்தியாவின் காலணி ஏற்றுமதியிலும் மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் நைக், அடிடாஸ், பூமா, க்ராக்ஸ், நியூ பேலன்ஸ், ரீபோக் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் காலணிகளை தயாரித்து, வாங்கத் தொடங்கியுள்ளன. இதனால் மாநிலம் இந்தியாவின் காலணி தலைநகரமாக மாறி வருகிறது.
கரூரில் அடிடாஸ் உற்பத்தி தொடக்கம்
பீனிக்ஸ் கோதாரி ஃபுட்வேர் நிறுவனம், கரூரில் உள்ள புதிய ஆலையில் ஜூலை 10 முதல் அடிடாஸ் காலணிகளை உற்பத்தி செய்யத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது சென்னையைச் சேர்ந்த கோதாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் தைவானின் எவர்வான் குழுமத்துக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும்.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரபீக் அகமது கூறுகையில், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த முதலீட்டின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 கோடி காலணிகளை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ஏன் முக்கியம்?
கரூரில் அடிடாஸ் உற்பத்தி தொடங்குவது, தமிழ்நாட்டின் காலணி துறைக்கு பெரும் உத்வேகத்தை அளிக்கும். இது உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் மற்றும் மாநிலத்தின் ஏற்றுமதி வருவாயை உயர்த்தும். மேலும் கரூர் டெக்ஸ்டைல், விவசாயத்திற்கு மட்டுமே பெயர்போன மாவட்டம் என்பதை தாண்டி தற்போது காலணி தயாரிப்பிலும் முன்னோடியாக உருவாரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications