தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம்
சென்னை: அமுல் வருமானம் 67000 கோடி ஆவின் வருமானம் 10000 கோடி தான்.. இப்படி வருமானம் ஈட்டும் வாய்ப்பு உள்ள அல்லது வருமானத்தை ஈட்ட வேண்டிய அரசின் ஐந்து துறைகள் பற்றி விரிவாக பார்ப்போம். ஏனெனில் அரசுக்கு கடன் சுமை மிக அதிகமாகிவிட்டது. 13 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. அரசு வருவாயை அதிகரிக்க என்ன வேண்டும் என்பதை பார்ப்போம்.
நேற்று தமிழக நிதியமைச்சர் என். மேரி வில்சன் வெளியிட்டுள்ள நிதிநிலை 'வெள்ளை அறிக்கை' ஒட்டுமொத்த மாநிலத்தையும் அதிர வைத்திருக்கிறது. அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தின் நேரடிக் கடன் மட்டும் சுமார் ₹10 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. இதோடு மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் மறைமுகக் கடன்களையும் சேர்த்தால், தமிழகத்தின் உண்மையான கடன் சுமை ₹13.18 லட்சம் கோடி என்ற வரலாற்றுப் பெருஞ்சுமையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த இமாலயக் கடனுக்காக வட்டி கட்ட மட்டுமே ஆண்டுதோறும் ₹67,050 கோடி மக்கள் பணம் வட்டி என்ற பெயரில் கரைந்து வருகிறது. அதாவது, தமிழக அரசின் மொத்த சொந்த வரி வருவாயில் சுமார் 35% வட்டி கட்டவே சரியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் தலையிலும் தோராயமாக ₹1.28 லட்சம் கடன் பாரம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் முன்னால் இருக்கும் சில தீர்வுகளை பார்ப்போம். ஏனெனில் இதனை எப்படி மாற்றப்போகிறோம்.வருவாயை அதிகரிக்க அரசு எடுக்க போகும் நடவடிக்கை என்ன என்பதை நேற்று வெளிப்படையாக அமைச்சர் அறிவிக்கவில்லை. இதனை பெரிய ஏமாற்றமாக பல்வேறு அரசியல் கட்சிகள் பார்க்கின்றன
அரசுக்கு உள்ள வழிகள் சிலவற்றை பார்ப்போம். அதேநேரம் இந்த வழிகள் மக்கள் மீது புதிய வரிகளை விதிப்பது அல்ல; மாறாக, நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களைச் சீரமைப்பதுதான். இதன் மூலம் ஒரு பைசா கூட வரி உயர்த்தாமல் ஆண்டுக்குக் கூடுதலாக ₹20,000 கோடி புதிய வருவாயை ஈட்ட முடியும். அதனை பார்ப்போம்.
மின்சாரத் துறை
தமிழக அரசு நிறுவனங்களிலேயே மிக அதிகபட்சமாக ₹2.47 லட்சம் கோடி கடன் சுமையோடு தத்தளித்துக் கொண்டிருப்பது மின்சாரத் துறைதான். அசுர வேகத்தில் நடக்கும் மின் கசிவுகளும், நிர்வாகக் குளறுபடிகளுமே இதற்கு முக்கியக் காரணம். முதல்வர் விஜய் இத்துறையில் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு இணையான டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் 'ஸ்மார்ட் மீட்டர்கள்' திட்டத்தை முழுமையாகக் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மின் திருட்டு மற்றும் வருவாய் கசிவுகளைத் தடுத்து, அரசுக்கு ஆண்டுக்கு ~₹10,000 கோடி வரை புதிய வருவாயை மீட்டெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள்.
ஏனெனில் ஸ்மார்ட் மீட்டர்கள் என்பவை வெறும் ரீடிங் எடுக்கும் கருவி அல்ல; அவை ஒரு குட்டி கம்ப்யூட்டர். யாராவது மீட்டரைத் திறக்கவோ அல்லது வயரைத் துண்டிக்கவோ முயன்றால் , அடுத்த நொடியே சென்னை தலைமையகத்தில் உள்ள கணினிக்கு "மீட்டர் எண் 1234-ல் முறைகேடு நடக்கிறது" என்று ஆட்டோமேட்டிக் சிக்னல் மற்றும் அலர்ட் சென்றுவிடும். தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமார் 15% முதல் 18% வரை இப்படித்தான் கணக்கில் வராமல் திருடப்படுகிறது . ஸ்மார்ட் மீட்டர் மூலம் இந்தத் திருட்டைக் தடுத்தாலே, விற்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் துல்லியமான பணம் வசூலாகும்.
இன்று மின்சார வாரியத்தின் மிகப்பெரிய பலவீனம்-மின்சாரத்தைப் பயன்படுத்திய 20 நாட்கள் கழித்து தான் பணம் கட்டுகிறார்கள். பல அரசு அலுவலகங்கள், பெரிய தொழிற்சாலைகள் கோடிக்கணக்கில் மின் கட்டண பாக்கி வைத்துள்ளனர். இதனால்தான் வாரியத்திற்குப் பணப்புழக்கம் இல்லாமல் வட்டிக்கு மேல் வட்டி கட்டுகிறது.
ஸ்மார்ட் மீட்டர் தீர்வு
மொபைல் ரீசார்ஜ் செய்வது போல "ப்ரீபெய்ட்" கார்டுகளாக இவை மாற்றப்படும். அதாவது, உங்கள் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே வீட்டில் விளக்கு எரியும். பணம் தீர்ந்துவிட்டால் மின்சாரம் தானாகத் துண்டிக்கப்படும்; ரீசார்ஜ் செய்தவுடன் 5 நிமிடத்தில் தானாக வந்துவிடும். மின்வாரிய ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று ரீடிங் எடுக்க வேண்டிய சம்பளச் செலவு மிச்சமாகும். முக்கியமாக, 0% பாக்கி நிலுவைத் தொகையே இல்லாததால் மின்வாரியம் வாங்கும் கடனுக்கான வட்டிச் சுமை பாதியாகக் குறையும் என்கிறார்கள். தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரப் பயன்பாட்டில், முறைகேடான இழப்புகளை இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் வெறும் 5% குறைத்தால் கூட, ஆண்டுக்குக் கூடுதலாக ₹8,000 கோடி முதல் ₹10,000 கோடி வரை மின்வாரியத்தின் கணக்கிற்குள் நேரடியாகப் பணம் வந்து சேரும்.
அரசுப் போக்குவரத்து கழகம்
இன்று தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் ₹43,865 கோடி கடன் சுமையில் மூழ்கி, டீசலுக்குக் காசில்லாமல் தவிக்கிறது. தனியார் ஆம்னி பேருந்துகள் கோடிகளைக் குவிக்கும் போது, அரசுப் பேருந்துகளால் ஏன் முடியாது? வெறும் பயணிகளைச் சுமப்பதோடு நிறுத்தாமல், அரசுப் பேருந்துகள் மூலம் 'பார்சல் மற்றும் கொரியர்' சேவைகளை கார்ப்பரேட் பாணியில் தொடங்க வேண்டும். மேலும், பேருந்து விளம்பரங்களை வெளிப்படையான கார்ப்பரேட் ஏல முறைக்கு மாற்றுவதன் மூலம் இத்துறையிலிருந்து கூடுதலாக ~₹4,500 கோடி வருவாயை அள்ளலாம். அரசு போக்குவரத்துக்கழங்ககளின் கட்டிடங்களை வணிக மையமாக மாற்றி வாடகைக்கு விட்ட சம்பாதிப்பதன் மூலம் ஓரளவு நல்ல வருவாய் ஈட்ட முடியும். சென்னையில் இந்த திட்டம் பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நுகர்பொருள் வாணிபம்
ரேஷன் கடைகளுக்குப் பொருட்களைப் பட்டுவாடா செய்யும் இந்தத் துறை, தற்போது ₹27,181 கோடி கடன் சுமையைக் கண்டுள்ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் இதே மளிகைப் பொருட்களைப் பாக்கெட் செய்து கொள்ளை லாபம் பார்க்கின்றன. தமிழக விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் உயர்தரப் பொன்னி அரிசி, பாரம்பரியச் சிறுதானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அழகிய 'அரசு பிராண்ட்' பாக்கெட்டுகளாக மாற்றிப் பொதுச்சந்தையில் சூப்பர் மார்க்கெட்டுகளில் இறக்கினால், இத்துறை மூலம் சுலபமாக ~₹3,000 கோடி ஈட்ட முடியும் என்று கூறுகிறார்கள்.
ஆவின் பால்
குஜராத்தின் 'அமுல்' நிறுவனம் ஆண்டுக்கு ₹67,000 கோடிக்கு மேல் விற்றுமுதல் (Turnover) செய்யும்போது, நம்மூர் ஆவின் வெறும் ~₹10,000 கோடி வரம்பிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது. முதல்வர் விஜய் இந்த பிம்பத்தை உடைக்க வேண்டும். பால் விற்பனையோடு நின்றுவிடாமல் நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் ஸ்வீட்ஸ் போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உலகத்தரம் வாய்ந்த பிராண்டிங் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும். இதன் மூலம் ஆவினில் மட்டும் கூடுதலாக ~₹2,000 கோடி நிகர லாபம் சாத்தியம் என்கிறார்கள்
சுற்றுலா & கைத்தறி
இன்று 'MakeMyTrip' போன்ற தனியார் தளங்கள் தமிழ்நாட்டின் சுற்றுலாவை வைத்து கல்லா கட்டுகின்றன. அரசுக்குச் சொந்தமான TTDC ஹோட்டல்களை 3-ஸ்டார் அந்தஸ்திற்கு உயர்த்தி, ஆன்மீகம் மற்றும் பாரம்பரியச் சுற்றுலாப் பேக்கேஜ்களை சர்வதேச அளவில் ஆன்லைனில் விற்கலாம். அதேபோல், கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி ஆடைகளை இன்றைய இளைஞர்களின் ரசனைக்கேற்ப மாற்றி 'மின்த்ரா, அமேசான்' போன்ற E-commerce தளங்களில் சந்தைப்படுத்தினால், இந்த இரு சிறு துறைகளும் சேர்ந்து அசால்ட்டாக ~₹500 கோடி கூடுதல் லாபத்தை அரசுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் என்கிறார்கள்.
இந்த 5 முக்கியத் துறைகளுக்கும் அரசியல் தலையீடற்ற முறையில் நிர்வாகம் நடந்தால், முறைகேடுகளையும், வருவாய் கசிவுகளையும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தடுத்து, இந்த நிறுவனங்களுக்குச் சுயாதீன செயல்பாட்டு அதிகாரத்தில் கொண்டு வந்தால் ₹20,000 கோடி கூடுதல் வருவாய் என்பது சாத்தியம் தான் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள்














Click it and Unblock the Notifications