சிறை கைதிகளுக்கு மன அழுத்தம்.. குடும்பத்தோடு பேச காணொளி தொலைபேசி வசதி.. அரசாணை
சென்னை: சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் தமது குடும்ப உறுப்பினர்களுடன் 3 நாட்களுக்கு ஒரு முறை வீடியோ தொலைபேசி மூலம் பேச வசதி ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையில் தவிக்கும் கைதிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சேலம் மத்திய சிறையில் மன அழுத்தம் அதிகம் உள்ள 30 சிறைவாசிகளுக்கு அவர்களின் மன அழுத்தங்களை போக்கும் விதமாக குளிர்கால மன அழுத்த மாதம் சிறப்பு கலை நிகழ்ச்சி முதல் முறையாக நடைபெற்றது.
குளிர்கால மன அழுத்த மாதம் என்பது வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் குளிர்காலம் என்பதால் மக்கள் வெளி இடத்திற்கு செல்லாமல் வீட்டுகுள்ளேயே முடங்கி இருப்பார்கள். இச்சூழ்நிலைகளில் மன அழுத்தங்கள் வருவது இயல்பாகும். அதனை சுட்டிக்காட்டும் விதமாக குளிர்கால மன அழுத்த மாதம் என்ற அடைமொழி உண்டு.
எனவே சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் குளிர்கால மன அழுத்த மாதம் சிறப்பு கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைவர் அமரேஷ் புஜாரி மற்றும் கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி சேலம் மத்திய சிறையில் உள்ள மன அழுத்தம் அதிகம் உள்ள 30 சிறைவாசிகள் தங்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகளான கவிதை, பாட்டு, கட்டுரை, பல குரலில் பேசுதல் (மிமிக்கிரி) ஆகிய திறமைகளை வெளிப்படுத்தினர்.
மேலும் அவர்களை மகிழ்ச்சி ஊட்டும் விதமாக பலூன் ஊதுதல் மற்றும் பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற சிறைவாசிகளுக்கு தன்னம்பிக்கை புத்தகங்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்த பிளாஸ்டிக் பக்கெட்டுகள் பரிசாக சேலம் மத்திய சிறையில் காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் வழங்கினார்.
இதனிடையே சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதியின் கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை, மாதத்திற்கு 10 முறை, ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் உயர்த்தி வழங்குவதோடு காணொளி தொலைபேசி வசதியினை புதியதாக ஏற்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால அளவை 3 நாட்களுக்கு ஒரு முறை மாதத்திற்கு 10 முறை ஒரு அழைப்பிற்கு 12 நிமிடங்கள் என உயர்த்தி வழங்குவதோடு, காணொளி (வீடியோ) தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications