டிராகன் பழ விவசாயத்தை அதிகரிக்க புதிய திட்டம்.. விவசாயிகள் நலன் காக்க முக்கிய அறிவிப்புகள்!
சென்னை: விவசாயிகள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களை இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார் வேளாண்மை - உழவர் நலத்துறை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று வேளாண்மை - உழவர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கான புதிய திட்டங்கள் வருமாறு:
1. மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிப்பதற்காக சிறப்புத் திட்டம் 18 மாவட்டங்களில் ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்.
2. ரூ. 10 கோடியே 19 லட்சம் மானியத்தில் பசுமைக் குடில், நிழல்வலைக் குடில்கள் அமைக்கப்படும்.
3. 5 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ரூ.10 கோடி செலவில் பாதுகாப்புக் கூடங்கள் அமைக்கப்படும்.

4. துவரை உள்ளிட்ட பிற பயறு வகைகளின் பரப்பு விரிவாக்கத்திற்கும் அவைகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் பொருட்டு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
5. சென்னை மாநகருக்கு காய்கறி அளிக்கக்கூடிய மாவட்டங்களில் நிழல்வலைக் குடில் அமைத்து காய்கறிகள் சாகுபடியினை ஊக்குவித்து காய்கறிகளின் வரத்தினை அதிகரிக்கும் வகையில் ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
6. டெல்டா மாவட்டங்களில் வறட்சிக் காலங்களில் பாசன நீர் தேவையினைப் பூர்த்தி செய்திடும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்ட குளங்களைத் தூர்வாரி மேம்படுத்தப்படும்.
7. திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா, சென்னையில் உள்ள செம்மொழிப் பூங்கா, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாலை மரபணுப்பூங்கா ஆகியவற்றின் அடிப்படை வசதிகள் ரூ. 1 கோடியே 22 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும்.

8. பேரிடர் காலங்களில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக சக்கரை வகை நெல் அறுவடை எந்திரங்களை மாற்றி வடிவமைத்திட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
9. அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுமதி ஆலோசனை மையங்கள் அமைக்கப்படும்.
10. தொழில் துவங்க ஆர்வமுள்ள விவசாயிகள், தொழில் முனைவோர்கள் ஆகியோருக்கு இலவசமாகத் திட்ட அறிக்கை தயாரித்து வங்கிக் கடன் பெற வழிவகை செய்யப்படும்.

11. டிராகன் பழத்தின் உற்பத்தி பரப்பினை அதிகரிக்க ரூ. 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் டிராகன் பழத்திற்கான செயல் விளக்கத் திடம் அமைக்கப்படும்.
12. கூடுதல் விவரங்களுடன் உழவர் செயலி மேம்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications