முற்றிலும் இலவசம்.. TNPSC, ரயில்வே போன்ற தேர்வுகளுக்கு தமிழ்நாடு அரசு பயிற்சி! எப்படி சேர்வது?
சென்னை: படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்காக TNPSC, SSC, IBPS, RRB ஆகிய போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசு சார்பில் இந்த போட்டித் தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், “TNPSC, SSC, IBPS, RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் 300 இடங்களுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது.

மேற்படி போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையவழியாக விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரை ஆறு மாத காலம் வாராந்திர வேலை நாட்களில் நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் தேர்வர்கள் குறைந்த பட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேற்படி, போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் உணவும் தங்கும் வசதிகளும் இல்லை.
பயிற்சியில் சேர விரும்பும் தேர்வர்கள் www.cecc.in வாயிலாக 29.01.2024 முதல் 12.02.2024 வரை விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 044 - 25954905 மற்றும் 044 - 28510537 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தமிழக அரசால் நடைமுறைபடுத்தப்பட்டு உள்ள இனவாரியான இடங்களுக்கு ஏற்ப தேர்வர்கள் தெரிவு செய்யப்பட்டு தேர்வர்களின் விவரங்கள் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் வெளியிடப்படும். மார்ச் மாத முதல் வாரத்தில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications