“சீரியஸ் மேட்டர்”.. சுப்ரீம் கோர்ட் சொன்ன 6 நாளில் மொத்தமாக மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர் ரவி!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்றம் அண்மையில் மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருப்பது சீரியசான பிரச்சனை எனக் கூறிய நிலையில் திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து பல்வேறு கருத்து மோதல்களை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஆளும் அரசுக்கு எதிராக தொடர் சர்ச்சை கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதேபோன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றுக்கும் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து வருகிறார்.

தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழ்நாடு அரசின் அத்தியாவசியமான விவகாரங்களில் ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைப்பது என்பது அரசியல் சாசனங்களுக்கு எதிரானது எனக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநர் சட்டசபை நிறைவேற்றிய மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. ஆளுநர் செயல்படாமல் இருக்கிறார் என தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது மிகவும் முக்கியமான விஷயம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபையில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களை ஆளுநர்கள் நிறுத்தி வைக்க முடியாது. நீண்ட நாட்களாக மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பது கவலைக்குரியது என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார். உச்சநீதிமன்றம் சீரியசான விஷயம் எனக் குறிப்பிட்டு கருத்துக் கூறி 1 வாரம் கூட முடிவடையாத நிலையில், ஆளுநர், மசோதாக்களை திருப்பி அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவையை கூட்டி இந்த சட்டமசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் சனிக்கிழமை (நவம்பர் 18) அன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு சிறப்புக் கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications