ஆவின் பால் விலையை குறைச்சிட்டு.. நெய், தயிர் விலையை உயர்த்துவதா.. தமிழக அரசுக்கு கடும் எதிர்ப்பு
சென்னை: ஆவின் பால் விலையை குறைத்துவிட்டு நெய், தயிர், பாதாம் பவுடர் ஆகியவற்றின் விலையை உயர்த்தியதை கண்டித்த பால் முகவர்கள் சங்கம், உடனடியாக அவற்றின் விலையை குறைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசின் பொதுத் துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் பொருட்களின் விலை நேற்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் விலை ரூ 515 இலிருந்து ரூ 535 ஆகவும், அரை லிட்டர் தயிர் விலை ரூ 27 லிருந்து 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அது போல் குல்பி ஐஸ் ரூ 25 லிருந்து ரூ 30 ஆக உயர்ந்துள்ளது. பாதாம் பவுடரின் விலை ரூ 80 லிருந்து ரூ 100 ஆக விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பால் கொள்முதல்
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற பொய்யான காரணத்தை கூறி கடந்த வாரம் தனியார் நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நெய், பாதாம் பால் பவுடர், SMP (Skimmed Milk Powder), தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலை குறிப்பாக ஆவின் நெய் லிட்டருக்கு 30.00ரூபாய் வரையிலும், SMP (Skimmed Milk Powder) 1Kg 40.00ரூபாய், பாதாம் பால் பவுடர் 1Kg 100.00ரூபாய், தயிர் லிட்டருக்கு 6.00ரூபாய் என கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டு புதிய விற்பனை விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

பால் பொருட்களின் விற்பனை
வழக்கமாக பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வு தொடர்பாக ஒரு வார காலத்திற்கு முன் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கி அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போதைய விற்பனை விலை உயர்வு இன்று (04.03.2022) முதல் அமுலுக்கு வருகிறது என்கிற தகவலை 24மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது நேற்றைய (03.03.2022) தினம் ஆவின் விற்பனை பிரிவு பொதுமேலாளர் அவர்களால் வெளியிடப்பட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆவின் பால் விற்பனை
ஏற்கனவே தனியார் பால் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆவின் பால் விற்பனையை குறைக்க செயற்கையான பால் தட்டுப்பாட்டை ஆவின் அதிகாரிகள் உருவாக்கி வரும் சூழ்நிலையில் தற்போது ஆவின் பால் பொருட்களின் கடுமையான விற்பனை விலை உயர்வு அதனை உறுதி செய்வதாக உள்ளது.

தமிழக முதல்வர்
எனவே தமிழக முதல்வர் ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தியிருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிடுவதோடு, ஆவின் பால் தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆவின் பால் விலையை குறைப்பது போல் குறைத்துவிட்டு அதை ஈடுகட்ட ஆவின் பொருட்களின் விலையை உயர்த்துவதா என எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications