பைக் முதல் பஸ் வரை.. வாகன வரி உயர்வு.. ஸ்டாலினுக்கு போன கோரிக்கை.. தமிழக அரசு அறிவிப்பு வருதா?
சென்னை: சாலை வாகனங்களுக்கான வரி உயர்வைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதுகுறித்த வேண்டுகோள்களும், தமிழக அரசுக்கு தொடர்ந்து விடுக்கப்பட்டு வருவதால், பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
தமிழகத்தில் சாலை வரி உயர்வானது, சமீபத்தில் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.. அதுபோலவே, சரக்கு வாகனங்களுக்கு சுமைக்கு ஏற்ப வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோலவே, இறக்குமதி வாகனங்களுக்கும், பழைய வாகனங்களுக்கும் வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது..

வரி உயர்வு: இந்த வரி உயர்வானது, வாகன ஓட்டிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது. வாகனங்களுக்கான இந்த வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளும் கிளம்பி உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) இதுகுறித்த முக்கிய வேண்டுகோளை விடுத்திருந்தது.
அப்போது, " சாலையில் இயங்கக்கூடிய இருசக்கர வாகனம்முதல் 20 சக்கர வாகனங்கள்வரையிலான பல்வேறு வகைவாகனங்களுக்கும், கட்டுமானதளவாட வாகனங்களுக்கும் மோட்டார் வாகனப் பதிவு வரி,சாலை வரி, பசுமை வரி, சாலை பாதுகாப்பு வரி போன்றவற்றை 40 சதவீதத்துக்கு மேலாக உயர்த்தி தமிழக அரசு கடந்த7-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
உதிரிபாகங்கள்: ஏற்கனவே, 2014-ம் ஆண்டு முதல் புதிய மோட்டார் வாகனசட்டங்களை மத்திய அரசுஒன்றன்பின் ஒன்றாக அமல்படுத்தி, அதற்கேற்ப எரி பொருள்விலை, உதிரிப்பாக விலை, இன்சூரன்ஸ், சுங்கவரி என அனைத்தையும் உயர்த்தியது. இப்போது, தமிழக அரசும் தன் பங்குக்கு வாகன வரிகளை நியாயமின்றி உயர்த்தியிருக்கிறது..
இந்த அறிவிப்பானது, மக்களிடம் தமிழக அரசுக்கு உள்ள ஆதரவான சூழலை இந்த வரி உயர்வு எதிராகத் திருப்பிவிடும் என்பதால், தமிழக அரசு வாகன வரி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். இதை மேலும் தாமதப்படுத்தினால் ஒட்டுமொத்த போக்குவரத்துத் துறையினரும் சாலைக்கு வருவதைத் தவிர வேறு வழியில்லை" என்று தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தனர்.
மீண்டும் கோரிக்கை: இந்நிலையில், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கமும் இதே கோரிக்கையை விடுத்திருக்கிறது.. தமிழகத்தில் கடந்த மாதம் உயர்த்தப்பட்டுள்ள சாலை வரியை குறைக்க வேண்டுமென, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முனிரத்தினம், பொதுச்செயலர் மணிவண்ணன் ஆகியோர் இதுகுறித்து சொன்னதாவது:
"டீசல், பெட்ரோல் மீதான விற்பனை வரியை குறைத்தால்தான், அத்தியாவசிய பொருட்களின் விலையும் குறையும். பஞ்சாப் மாநிலத்தை போல, தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, காலாவதியான, 20 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். ஏற்கனவே, ஜிஎஸ்டியால், தொழில் நடந்த முடியாமல் அவதிப்படும் நிலையில், வாகனங்களுக்கும் வரியை உயர்த்தியிருப்பது, கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
வாகனங்கள்: எனவே, வாகனங்களுக்கான சாலை வரியை குறைக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டால், அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், மணல் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக மணல் வழங்க வேண்டும். இந்த தொழிலை நம்பி, 75,000 மணல் லாரி உரிமையாளர், டிரைவர்கள், 90 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் இருக்கிறார்கள்..
எனவே, மழைக்காலம் முடிந்ததுமே, மாநிலம் முழுதும் உள்ள 90 மணல் குவாரிகளை திறக்க வேண்டும்... இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தமிழக முதல்வரிடம் அளித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர்.
பெருகும் எதிர்பார்ப்பு: வாகனங்களுக்கான வரி உயர்வுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்துள்ளதால், தமிழக அரசு இதுகுறித்து விரைவில் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications