2,000 மின்சார பேருந்துகள் உட்பட 12,000 புதிய பேருந்துகள்... துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு
சென்னை: அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இரண்டாயிரம் மின்சாரப் பேருந்துகள் உட்பட 12,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை கலைவானர் அரங்கில் துணை முதல்வர் ஒ பன்னீர் செல்வம் இன்று தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
துணை முதல்வர் பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே தங்களுக்குப் பேச அனுமதிக்க வேண்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்குச் சபாநாயகர் அனுமதி அளிக்க மறுத்ததால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தனர்.
மறுபுறம் இந்த கூச்சல்களுக்கு மத்தியில் ஒ பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். துறை ரீதியாக பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தமிழ்நாட்டில் அடுத்த சில ஆண்டுகளில் 12,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தார்.
கொங்கு மண்டலத்திற்கு சூப்பர் அறிவிப்பு.. கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 6683 கோடி ஒதுக்கீடு
இந்த 12,000 பேருந்துகளில் 2,000 பேருந்துகள் மின்சாரப் பேருந்துகளாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ரூ1,580 கோடி செலவில் மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படுவதாக அவர் கூறினார். முதல்கட்டமாக 2,200 பிஎஸ் 6 பேருந்துகள் மற்றும் 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்