வாவ்.. தமிழகத்தில் விலக்கப்பட்டது கொரோனா கட்டுப்பாடுகள்.. அரசியல், கலாச்சார கூட்டங்களுக்கும் அனுமதி
சென்னை: தமிழகத்தில் அரசியல், சமுதாய, கலாச்சார கூட்டங்களுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண் 75, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உள்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையை கடைப்பிடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்வர்
முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அனுமதி
இதுவரை நடைமுறையில் இருந்து வந்த சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை மார்ச் 3 ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது. மேலும் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைத்திட மார்ச் 3 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை கீழ்க்கண்ட செயல்பாடுகள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

500 பேர்
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 500 பேர்களுக்கு மிகாமல் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 250 நபர்களுடன் நடத்த அனுமதிக்கப்படும். மேற்சொன்ன இரண்டு கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்டிருந்த இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன. மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

தடுப்பூசி
மேலும் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் இரண்டு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்












Click it and Unblock the Notifications