கடற்கரை மணல் கொள்ளை: முக்கிய ரிப்போர்ட்டை தயார் செய்கிறது தமிழக அரசு.. ஐகோர்ட்டில் தகவல்!
சென்னை: கடற்கரைப் பகுதிகளில் மணல் அள்ள 2013 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள தடை தொடர்பாக மற்றொரு அறிக்கையை தயார் செய்துள்ளதாக தமிழக அரசு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வந்தது. தாது மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன. சட்டவிரோதமாக தாது மணல் எடுக்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து தாது மணல் எடுப்பதற்கும், வாகனங்களில் கொண்டு செல்வதற்கும் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழக அரசு தடை விதித்தது.

எனினும், பல்வேறு இடங்களில் சட்ட விரோதமாக தாது மணல் கொள்ளை நடைபெற்று வந்தது. தாது மணல் கொள்ளை தொடர்பாக கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கடற்கரை மணல் அகழ்வு மற்றும் ஏற்கனவே குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கனிமங்களை கொண்டு செல்வது தொடர்பாக 2013 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள தடை தொடர்பாக மற்றொரு அறிக்கையை தயார் செய்துள்ளதாக தமிழக அரசு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன்பு தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி.தாதர், சமீபத்திய அறிக்கை தயாராக உள்ளதாகவும், மூன்று நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், அடுத்த வாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபூர்வாலா விசாரிக்க உள்ளதால், 2015ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த பொதுநல வழக்கையும், மற்ற தொடர்புடைய வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட முடிவு செய்தார். அதன்படி டிசம்பர் 11ம் தேதி விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், சட்டவிரோதமாக தாதுமணல் எடுத்ததால் ஏற்பட்ட 5832.44 கோடி ரூபாய் இழப்பை, தனியார் தாது மணல் ஏற்றுமதியாளர்களிடமிருந்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தனியார் நிறுவனங்கள் வசம் உள்ள ஒரு கோடியே 55 லட்சம் டன் தாது மணலை பறிமுதல் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2000ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத சுரங்கம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து அனைத்து கையிருப்புகளையும் பறிமுதல் செய்வதாக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் 1.55 கோடி டன் பங்குகளை பறிமுதல் செய்து மத்திய பொதுத்துறை பிரிவான இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் ஒப்படைக்க நீதிமன்றத்தின் அனுமதியை கோரியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications