11 கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மேகநாத ரெட்டிக்கு உதயநிதி இலாகாவில் பொறுப்பு!
மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கன்னியாகுமரி, பெரம்பலூர், தேனி, கோவை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியராக கே.பி.கார்த்திகேயன், தென்காசி ஆட்சியராக ரவிசந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேகப், விழுப்புரம் ஆட்சியராக பழனி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல, தாம்பரம், திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, ஓசூர், வேலூர் மாநகராட்சி ஆணையர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேகநாத ரெட்டி மாற்றம்
தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள உத்தரவின்படி, செய்தித்துறை இயக்குனராக இருந்த ஜெயசீலன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். செய்தித்துறை இயக்குனராக மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியராக் பணியாற்றி வந்த மேகநாத ரெட்டி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை உறுப்பினர் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர்கள் அதிரடி மாற்றம்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஶ்ரீதர், விழுப்புரம் ஆட்சியராக பழனி, திருநெல்வேலி ஆட்சியராக கார்த்திகேயன், பெரம்பலூர் ஆட்சியராக கற்பகம், தேனி ஆட்சியராக ஷாஜீவனா, கோவை ஆட்சியராக கிராந்தி குமார், திருவாரூர் ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை ஆட்சியராக மகாபாரதி, கிருஷ்ணகிரி ஆட்சியராக தீபக் ஜேக்கப், தென்காசி ஆட்சியராக ரவிச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை ஆட்சியர் மாற்றம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு, தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்து அறநிலையத் துறை ஆணையராக இருந்த குமரகுருபரன், தகவல் தொழில்நுட்பத் துறை செயலராக மாற்றப்பட்டு உள்ளார்.

துறை செயலர்களாக நியமனம்
இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தொழில்துறை சிறப்புச் செயலாளராக பூஜா குல்கர்னி, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக குமரகுருபரன், பள்ளிக்கல்வித்துறை சிறப்புச் செயலாளராக ஜெயந்தின், ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக லட்சுமி பிரியான், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக விஷ்ணு ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநகராட்சி ஆணையர்கள்
மேலும், தாம்பரம் மாநகராட்சி ஆணையராக அழகு மீனா, திருப்பூர் ஆணையராக பவன் குமார், தூத்துக்குடி ஆணையராக தினேஷ் குமார், ஓசூர் ஆணையராக ஸ்நேகா, வேலூர் ஆணையராக ரத்தினசாமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிரடியாக பல்வேறு மாவட்ட கலெக்டர்களும், மாநகர ஆணையர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications