75 ஆண்டு வரலாற்றில் இப்படி நடந்தது இல்லை.. தீர்ப்பு தந்த நீதிபதிக்கு அச்சுறுத்தல்.. ஆளுநர் ரவி ஆதங்கம்
சென்னை: திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தார்கள் என்றும், தீர்ப்பு தந்த நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் 75 ஆண்டுகால வரலாற்றில் நடந்ததே இல்லை எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தெரிவித்துள்ளார். மேலும் நம் வரலாற்றிலேயே இது நடக்காதது என்றும், அரசமைப்பை குலைப்பதற்கான திட்டமிட்ட முயற்சிதான் இது என்றும் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தீர்ப்பு தந்த நீதிபதி அச்சுறுத்தப்பட்ட சம்பவம் போன்று 75 ஆண்டு வரலாற்றில் நடந்தது இல்லை. அரசமைப்பை குலைப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சி இது. நமது வரலாற்றில் இதுவரை நடக்காதது. திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு தந்த நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முயற்சித்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் செல்லுங்கள்" என்று கூறியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பின்னர் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
இதையடுத்து கார்த்திகை நாளில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படும் என பலரும் நினைத்த நிலையில், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார்க் கோவில் அருகேயே தீபம் ஏற்றப்பட்டது. தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனை எதிர்த்து கோயில் நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர், சிக்கந்தர் தர்கா நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச், தீபம் ஏற்றலாம் என்று கூறி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. இதற்கு மத்தியில் ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு, ஒரு தலைபட்சமானது எனவும் தொடர்ந்து ஒரு தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின.
திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள், நாடாளுமன்றத்தில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக்கோரி தீர்மானம் கொண்டு வரக்கோரி சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதற்கு சில முன்னாள் நீதிபதிகள், நீதித்துறையை மிரட்டும் முயற்சி என எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இத்தகைய சூழலுக்கு நடுவேதான் ஆளுநர் ஆர்.என். ரவி மேற்கண்டவாறு பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications