ஆவின் பாலகம் அமைக்க விருப்பமா? ஆதிதிராவிடர் தொழில் முனைவோருக்கு ரூ.45 லட்சம் - தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோருக்கு ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் மேற்கூறிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மொத்தம் ரூ.45 லட்சம் மானியம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 50 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் - பழங்குடியினர்
தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களை முன்னேற்றவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, நிலமற்றவர்களுக்கு பட்டா நிலம், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு சிறு குறு தொழில்களை தொடங்குவதற்கான மானியம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், இத்திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், முன்னின்று நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அமைச்சகமே அமைக்கப்பட்டிருக்கிறது.

விழிப்புணர்வு இல்லை
மேலும், இந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் தொழில் தொடங்க ஏதுவாக 50 சதவீதம் மானியத்துடன் தாட்கோ மூலம் கடனும் வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், இதுகுறித்த விழிப்புணர்வு பெரும்பாலான மக்களிடம் இல்லை என்பதே வேதனைக்குரிய விஷயம். குறிப்பாக, தமிழகத்தில் பழங்குடியின மக்கள் பலருக்கு அரசு தங்களுக்கு இந்த வசதிகளை எல்லாம் செய்து தருகிறது என்பது தெரியாமலேயே இன்றளவும் இருந்து வருகின்றனர்.

ஆவின் பாலகம்
ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தினருக்கு செயல்படுத்தி வரும் திட்டங்களில் ஒன்றாக தற்போது அவர்களுக்கு ஆவின் பாலகம் அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2022-23-ம் ஆண்டுக்கான அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆவின் பாலகம் அமைத்து தர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின் வாகனம் உறைவிப்பான், குளிர்விப்பான் உள்ளிட்ட உபகரணங்களை கொள்முதல் செய்து ரூ.1.50 கோடி மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்து தரப்படவுள்ளது.

மானியம் எவ்வளவு?
இந்த ஆவின் பாலகம் அமைப்பதற்காக ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த 40 பேருக்கு ரூ.36 லட்சம் மானியம், மத்திய அரசு நிதியில் இருந்து வழங்கப்படும். அதேபோல, 10 பழங்குடியின தொழில் முனைவோருக்கு ரூ.9 லட்சம் மாநில அரசு நிதியில் இருந்தும் வழங்கப்படும். எனவே ஆவின் பாலகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications