பணம் கட்டி ஆன்லைன் கேம் விளையாட தடை.. உள்ளே நுழைய ஆதார் கார்டு கட்டாயம்.. புது ரூல்ஸ் என்னென்ன?
சென்னை: 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் பணம் கட்டி ஆன்லைன் கேம் விளையாட தடை விதித்துள்ளது தமிழ்நாடு அரசு. மேலும், மற்ற வயதினர் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணம் கட்டி ஆன்லைன் கேம் விளையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் குறித்துப் பார்ப்போம்.
தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் ஆன்லைன் சூதாட்ட மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆன்லைன் சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்தனர். இதை உடனே தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய சட்டம் இயற்றியது.

இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தnஅ. பின்னர் தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த 2023 ஆண்டு நவம்பர் 10 ஆம் தீர்ப்பு வந்தது. அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை கடுமையாக்கி தமிழ்நாடு ஆன்லைன் கேமிங் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதாவது 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆன்லைனில் பணம் கட்டி விளையாட தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் தடை விதித்துள்ளது.
இந்த இணையவழி விளையாட்டு ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன் தலைமை வகித்து வருகிறார். இந்த ஆணையம் அரசுக்கு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய விதிகள் மூலம் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகள்:
1. 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து சிறுவர் சிறுமிகளும், ஆன்லைனில், வெற்றி என்ற இலக்குடன், பணத்தை மையமாக வைத்து பண விளையாட்டில் ஈடுபடுவது தடை செய்யப்படுகிறது.
2. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமில் பயனர்கள் யாரையும் அனுமதிக்கக்கூடாது. ஆன்லைனில் விளையாடுபவர்கள் யார் என்பது குறித்து கண்டிப்பாக நிறுவனங்கள் கே.ஒய்.சி (KYC) வாங்க வேண்டும்.
3. பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் அட்டை சரிபார்ப்பு இனி கட்டாயம். வாடிக்கையாளர்கள் கணக்கு துவங்கும் போது, ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண்ணிற்கு, ஓ.டி.பி எண்களை அனுப்பி சரிபார்க்க வேண்டும்.
4. அனைத்து ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களும், தங்களின் வாடிக்கையாளர், தினம், வாரம், மாதம் எவ்வளவு தொகைக்கு விளையாட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்து கொள்ள வசதி செய்து தர வேண்டும்
5. ஆன்லைன் விளையாட்டில் தினம், வாரம், மாதம் எவ்வளவு பணம் செலவாகிறது என்று விளையாடுபவர்களுக்கு ஆன்லைன் நிறுவனம் எச்சரிக்கை செய்தி 'பாப்-அப்' அனுப்ப வேண்டும்.
6. ஆன்லைனில் விளையாடுவோருக்கு ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
7. ஆன்லைன் விளையாட்டிற்கு செயலி மற்றும் பிற சாதனங்கள் வாயிலாக உள் நுழையும் போது, 'ஆன்லைன் விளையாட்டு இயற்கையில் அடிமையாக்கும்; இந்த விளையாட்டுகள் போதை பொருளுக்கு நிகரானது' என்ற எச்சரிக்கை செய்திகளை தொடர்ந்து காட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications