ஊட்டி & கொடைக்கானல் அழகை ரசிக்க கண்ணாடி பேருந்துகள்.. சுற்றுலா அனுபவமே மாறும்! சென்னை ஐகோர்ட் யோசனை
சென்னை: ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் சுற்றுலா வாகனங்கள் வருகையைக் கட்டுப்படுத்த மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் எனத் தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
நமது மாநிலத்தில் உள்ள ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலாத் தலங்களில் வாரயிறுதி மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இதுபோல அதிகப்படியான மக்கள் திரள்வதால் கூட்ட நெரிசல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

ஊட்டி & கொடைக்கானல்
இதை கருத்தில் கொண்டு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது ஊட்டி, கொடைக்கானலில் இ- பாஸ் நடைமுறை தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், பிளாஸ்டிக் கொண்டு செல்வதைக் கண்காணிக்கக் கூடுதலாக சுய உதவிக் குழுவினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசு சிறப்பு வழக்கறிஞர் விளக்கினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிப்ரவரி மாத புள்ளிவிவர கணக்குப்படி விடுமுறை நாட்களில் 5 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், சாதாரண நாட்களில் 3 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும் வருகை தருவதாகக் குறிப்பிட்டனர்.
சென்னை ஐகோர்ட்
கோடை விடுமுறை நெருங்கி வரும் நிலையில், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம். அறிக்கை தாக்கல் செய்யும் வரை தற்காலிகமாகக் குறைந்தபட்சமாக எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிக்கலாம் என முடிவு செய்வது குறித்து, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விளக்கமளிக்க ஏதுவாக, விசாரணையை மார்ச் 13ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
கண்ணாடி பேருந்துகள்
மேலும், தரமான சுற்றுலாவை வழங்கும் வகையில், மலை அடிவாரத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்தி, பயணிகளை மின்சார பேருந்து அல்லது கண்ணாடி பேருந்துகளில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு அனுமதிக்கலாம். அது பயணிகளுக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என யோசனை தெரிவித்த நீதிபதிகள், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் எனவும், தேவையில்லாத விபத்துகள் தவிர்க்கப்படும் எனவும் இது தொடர்பாக விவரங்களைக் கேட்டுத் தெரிவிக்கும்படி அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications