முட்டாள்தனமா கேட்காதே.. திமுகவிற்கு ஓட்டளிப்பது 6வது கடமைனு எங்கே சொன்னேன்? காதர் மொகிதீன் டென்ஷன்
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி இன்று வெளியேறுவதாக அறிவித்தது. இதுதொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பின்போது ''திமுகவிற்கு ஓட்டளிப்பது இஸ்லாமியர்களின் 6வது கடமை என்று கூறுனீர்களே? என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கொந்தளித்தார். முட்டாள் தனமான கேள்வியை கேட்காதே என்று கோபத்தை கொப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சேர்ந்து போட்டியிட்டது. மொத்தம் 2 தொகுதிகளை திமுக வழங்கியது. இதில் வாணியம்பாடி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ சையது பாரூக் பாஷா, பாபநாசம் தொகுதியை சேர்ந்த ஏஎம் ஷாஜகான் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தேர்தலுக்கு பிறகு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திமுகவிடம் சொல்லிவிட்டு தவெகவிற்கு ஆதரவு வழங்கியது. பாபநாசம் எம்எல்ஏ ஏஎம் ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியை முதல்வர் விஜய் வழங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் சென்னை ராயபுரத்தில் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்று முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வசதியாக அதற்கான பணிகளை தொடங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதுபற்றி கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் பத்திரிகையாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர், ''60 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் இருந்தோம். தற்போது தவெக அமைச்சரவையில் இடம் பெற்றதால் திமுக கூட்டணியில் தொடர முடியாத நிலை இருப்பதால் வெளியேறுகிறோம்'' என்று கூறினார். இதன்மூலம் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு அடுத்த அடியாக பார்க்கப்படுகிறது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு காதர் மொகிதீன் பதிலளித்தார். இந்த சமயத்தில் பத்திரிகையாளர் ஒருவர், ''திமுகவிற்கு ஓட்டளிப்பது இஸ்லாமியர்களின் 6வது கடமை என்று நீங்கள் கூறுனீர்களே?'' என்று கேள்வி எழுப்பினார். அதற்கு காதர் மொகிதீன், ''அது நீங்களாக கற்பனை பண்ணி கேட்கக்கூடாது. இஸ்லாமிய மார்க்கத்தில் மொத்தம் 5 கடமை உள்ளது. 6வது கடமை ஜனநாயகத்தில் ஓட்டுப்போடுவது என்று சொன்னேனே தவிர, திமுக கூட்டணிக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று நான் கூறவில்லை. அப்படி சொன்னதாக நீங்களே கற்பனை செய்தால் எப்படி?
நான் எப்போது சொன்னேன். 6வது கடமையாக ஜனநாயகத்தில் ஓட்டுப்போடுவதை கருத வேண்டும் என்று சொன்னேன். எஸ்ஆர் சற்குணம் கூட்டத்தில் தான் இப்படி சொன்னேன். அதை நிறைவேற்ற வேண்டும் என்று நான் கூறினேன். அப்போது நாங்கள் திமுக கூட்டணியில் இருந்தோம். திமுகவிற்கு ஓட்டுப்போட வேண்டியது 6வது கடமை என்று நான் சொன்னதும் இல்லை'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் தேர்தல் பிரசாரத்தில் பேசியதாகவும், சமூக வலைதளங்களில் பரவுகிறதே என்று கூறினார். இதனால் டென்ஷனான காதர் மொகிதீன் ஒருமையில் திட்டினார். ''என்னய்யா நான் சொல்லவே இல்லை என்று சொல்கிறேன். சொல்லாததை சொன்னதாக சொல்லி கேட்டால் என்ன சொல்ல முடியும். ஆம். நான் சொல்லாததை எப்படியா கேட்க முடியும். என்ன பிரசாரம் பிரசாரம்னு சொல்ற. முட்டாள் தனமாக கேள்வி கேட்காத'' என்று கொந்தளித்தார்.












Click it and Unblock the Notifications