எம்.எல்.ஏக்கள் ஆபீசில் இ-சேவை மையங்கள்.. பொதுமக்களுக்கு கஷ்டம் காத்திருக்கு.. பரிசீலிக்குமா அரசு?
சென்னை: அனைத்து தொகுதி எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் குழப்பங்களும் பொதுமக்களிடத்தில் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் அரசிடம் இருந்து பெற வேண்டிய ஜாதி சான்றிதழ், வருமான வரி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ், விதவை சான்றிதழ் என 100-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். அரசின் உரிமம் பெற்ற இ-சேவை மையங்கள், பொதுமக்கள் தங்களது மொபைல் கணிணிகள், இ சேவை உரிமம் பெறாத பிரவுசிங் சென்டர்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் இந்த சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெற முடியும்.

நடைமுறை என்ன?
இப்படி விண்ணப்பித்தால் 1 வாரம் அல்லது 15 நாட்கள் காத்திருந்தால் உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தால் நமக்கு வரும் எஸ்.எம்.எஸ்.மூலம் ஆன்லைனிலேயே இந்த சான்றிதழ்களை டவுன்லோடு செய்துவிட முடியும். அதாவது லஞ்சம் என ஒரு பைசா செலவு இல்லாமல் இத்தகைய சான்றிதழ்களை பெறலாம். இதற்கு இ சேவை மையங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை வசூலிக்கின்றன. பிரவுசிங் சென்டர்கள் அரசு நிர்ணயித்த கட்டணம் பிளஸ் இதர கட்டணங்கள் வசூலிக்கின்றன. இத்தகைய நடைமுறை மூலம் வி.ஏ.ஏ, வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து சென்று பணத்தை லஞ்சமாக கொடுத்து ஒரு சான்றிதழைப் போராடிப் பெற வேண்டும் என்கிற நிலைமை பெருமளவு ஒழிந்து போயிருக்கிறது. இது சாமானிய மக்களுக்கு ஆகப் பெரும் வரமாக இருந்து வருகிறது.

தமிழக அரசு புதிய நடைமுறை என்ன?
இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் இனி செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான லாகின் ஐடி பாஸ்வேர்டுகள், கணிணிகளை தமிழக அரசே வழங்கியிருக்கிறது. அரசின் சேவைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் எம்.எல்.ஏக்கள் அலுவலகங்களிலும் இ சேவை மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன; ஆகையால் பாராட்டுக்குரியதுதான் என மேலோட்டமாக சொல்லிவிடலாம்.

சாத்தியம்தானா இது?
ஆனால் இது நடைமுறையில் எப்படி பயனளிக்கப் போகிறது என்பது கேள்வியாக உள்ளது. ஏனெனில் குக்கிராமங்களில் கூட இ-சேவை மையங்கள் பிரவுசிங் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் எம்.எல்.ஏ. அலுவலகம் என்பது ஒரு தொகுதியின் தலைமை ஊரில் மட்டுமே இருக்கிறது. அதே ஊரிலும் ஏற்கனவே பல இசேவை மையங்கள் வீதி தோறும் செயல்பட்டும் வருகின்றன. அப்படியானால் இனி எம்.எல்.ஏ. அலுவலகம் தவிர அந்த தொகுதியில் செயல்படுகிற இ சேவை மையங்கள் அனைத்தும் என்னவாகும்? அவை அனைத்தும் எம்.எல்.ஏ. அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தான் போகுமா? என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

மக்களுக்கு காத்திருக்கிறதா துயரம்?
எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களில் அந்த எம்.எல்.ஏ.சார்ந்த கட்சியைச் சேர்ந்தவர்தான் பணியில் இருப்பார். எம்.எல்.ஏ. அலுவலகம் சொன்னால் அத்தனை சான்றிதழ்களும் உடனடியாக வழங்கப்பட்டுவிடும் என்பது யதார்த்தம். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், தானம் தருமம் செய்வதைப் போல இலவசமாக உடனுக்குடன் சான்றிதழ்களை வழங்கிவிடப் போவதும் இல்லை. கணிசமான ஒரு தொகையைப் பெற்று வசூலிக்கத்தான் அவர்கள் முயற்சி செய்வார்கள். இது பொதுமக்கள் இதுவரை அனுபவித்த எளிமையான நடைமுறையை தலைகீழாக்கி இனி எல்லாவற்றுக்கும் எம்.எல்.ஏ. ஆபீசுக்குப் போனால் எல்லாம் ஈஸியாக நடந்துவிடும் என புதிய களேபரத்தைத்தான் உருவாக்கும்; இதுபொதுமக்களுக்கு பெருந்துயரமாகிவிடும் என்பது பொதுமக்கள் ஐயம்.












Click it and Unblock the Notifications