கஜா சேத கணக்கெடுப்பு சரியாக நடத்தப்படவில்லை.. டிடிவி தினகரன் கண்டனம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை கணக்கெடுப்பு பணிகள் சரிவர நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை கணக்கெடுப்பு பணிகள் சரிவர நடக்கவில்லை என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக அறிக்கையின் வாயிலாக அரசுக்கு தினகரன் கோரிக்கை விடுத்து வருகிறார். நாள் தோறும் எழும் கோரிக்கைகளை அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் பதிவிட்டு, அரசுக்கு தெரிவுப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில், கிராம நிர்வாக அலுவலர்களுகாக அவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
|
அரசுக்கு கோரிக்கை
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய இடம் வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள், தங்கள் சொந்த மாவட்டத்திலேயே பணிபுரிந்தால் தான், பணியில் பெரும்பான்மையான நேரம் இருக்க முடியும். இதனை கருத்தில் கொண்டு அவர்களுக்கான இடமாறுதலுக்கான கவுன்சிலிங் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
|
6 ஆண்டுகளாக நடக்கவில்லை
பணிமாறுதலுக்கான கவுன்சிலிங் 6 ஆண்டுகளாக நடக்கவில்லை. அரசு வழங்கிய லேப்டாப் பழுதானதை சரிசெய்ய உதவவில்லை. இணையதள வசதிக்கு தாங்களே செலவு செய்துவருவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளைமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக செய்தி வந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
|
பணிகள் சரிவர நடக்கவில்லை
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவரை கணக்கெடுப்பு பணிகள் சரிவர நடக்கவில்லை என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், இவர்களின் போராட்ட அறிவிப்பு மக்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கும். ஆகவே, அவர்களை அழைத்துப் பேசி இப்பிரச்சனைக்கு அரசு உடனடி தீர்வு காணவேண்டும்.
தினகரன் ட்வீட்
முன்னதாக, கஜா புயலால் பல லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து, பல்லாயிரம் விவசாயிகளை நிற்கதியாக்கியிருக்கிறது. இந்த பாதிப்பால் நிலைகுலைந்து போயுள்ள விவசாயிகளை மேலும் வேதனைப்படுத்தும் விதமாக ஒரு தென்னை மரத்திற்கு 1100 ரூபாய் மட்டுமே இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் வாழ்க்கையையே ஒரு புயலில் இழந்துள்ள இந்த விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.