தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டால் நடவடிக்கை பாயும்! தமிழக அரசு எச்சரிக்கை!
சென்னை: தனியார் பள்ளிகளை முன் அனுமதியின்றி நாளை மூடினாலோ விடுமுறை விட்டாலோ கடும் நடவடிக்கை பாயும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மீதான தாக்குதலை கண்டிக்கும் விதமாக நாளை முதல் தனியார் பள்ளிகள் தமிழகம் முழுவதும் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் தமிழக அரசு இந்த அதிரடி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
அரசின் எச்சரிக்கையை மீறி நாளை தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுப்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.

கள்ளக்குறிச்சி பள்ளி
கள்ளக்குறிச்சி சக்தி இண்டர்நேஷனல் பள்ளி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை முதல் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் இயங்காது என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் அறிவித்திருந்தார். அவர் இவ்வாறு அறிவித்த சில நிமிடங்களில் அரசு தரப்பில் இருந்து எச்சரிக்கும் தொணியில் ஒரு அறிவிப்பு வந்திருக்கிறது. அதாவது முன் அனுமதியின்றி நாளை தனியார் பள்ளிகள் மூடப்பட்டாலோ அல்லது விடுமுறை விடப்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசு
பள்ளிகளை மூடுவோம் என அறிவித்துவிட்டதால் தங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்த்த தனியார் பள்ளி நிறுவனர்களுக்கு அரசின் இந்த அதிரடி எச்சரிக்கை எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. இதனிடையே எந்த சலசலப்புக்கும் அஞ்சாத அரசு திமுக அரசு என்பதை இதன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் உணர்த்தியுள்ளார். பள்ளிகள் நடத்த அனுமதி கிடைக்காமல் ஆயிரக்கணக்கானோர் அலைந்து வருவது இங்கு கவனிக்கத்தக்கது.

சட்ட நடவடிக்கை
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீதான தாக்குதல் சம்பவத்தை யாரும் நியாயப்படுத்தவில்லை. அது முற்றிலும் தவறான ஒரு நிகழ்வு தான் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து கிடையாது. இந்நிலையில் அதனை கண்டித்து அறிக்கையோ, ஆர்ப்பாட்டமோ, சட்ட நடவடிக்கையோ மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் தரப்பில் முன்னெடுக்கலாம். இல்லையென்றால் சேதம் அடைந்த சக்தி இண்டர்நேஷனல் பள்ளியை சீரமைக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் சார்பில் தாரளமாக ஒரு பெரும் தொகையை கூட நிதியுதவியாக வழங்கலாம். அதனை யாரும் தடுக்கப் போவதில்லை.

பெற்றோர்களை அதிர்ச்சி
ஆனால் அதையெல்லாம் விடுத்து அப்பாவி மாணவர்களின் கல்வி உட்பட எதைப்பற்றியும் கவலைப்படாமல் நாளை முதல் பள்ளிகளை மூடுவோம் என அறிவித்திருப்பது ஒட்டுமொத்த பெற்றோர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications