அப்ளாஸ் அள்ளும் தமிழ்நாடு அரசு.. சாதிக்கு எதிராக பள்ளி மாணவர்களுக்கு புத்தகம்! பெரியாரே பாராட்டுவாரு
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களிடையே சாதியவாதத்திற்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தி சமூக நீதியை புகட்டும் வகையிலான புதிய புத்தகம் ஒன்றை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிமுகம் செய்து இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் வழங்கப்படும் பள்ளி மாணவர்களுக்கான பாடபுத்தகத்தில் தவறாமல் அட்டைப் படத்திலேயே இடம்பெற்று இருக்கும் வாசகம், "தீண்டாமை ஒரு பாவச் செயல். தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மை அற்ற செயல்." என்பதாகும். சாதிய தீண்டாமைகளுக்கு எதிராக ஒவ்வொரு புத்தகத்திலும் இப்படி வாசகம் இடம்பெற்று இருந்தாலும், பள்ளிகளிலேயே சாதிய மனோநிலை அதிகரித்து இருப்பதை சமீபத்தில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்கள் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளன.

சிறுவர்களே சாதியை வெளியில் காட்டும் வகையில் பல வண்ணங்களில் கயிறுகளை கட்டி வருவதும் அதிகரித்து வருகிறது. சாதியின் காரணமாக வகுப்பில் படிக்கும் சக மாணவனையே வீடு புகுந்து அரிவாளால் வெட்டுவது, வகுப்பை விட்டு ஒதுக்கி வைப்பது, சில ஆசிரியர்களே சாதிய மனோபாவத்துடன் மாணவர்களை நடத்துவது என, அறிவையும், முற்போக்கு தத்துவங்களையும் போதிக்க வேண்டிய பள்ளிக் கூடங்கள், சாதியை ஊக்குவிக்கும், சாதிக் கட்சி மாநாடுகள்போல் மாறி இருப்பதை நினைக்கையில் எதிர்காலத்தின் மீதான பயன் அதிகரிக்கிறது.
இந்த நிலையில்தான் அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் சாதி, நிற ஏற்றத்தாழ்வுகளை போக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை புதிய புத்தகம் ஒன்றை வெளியிட்டு உள்ளது. ச.மாடசாமி எழுதிய "நோ சொல்லு" என்ற புத்தகம்தான் அது. அழகான கார்ட்டூன் படங்களுடன் மழலைகளுக்கு எதில் புரியும் வகையில், சாதி, நிற பாகுபாட்டுக்கு அதில் குறிப்பிடப்பட்டு உள்ள சில வரிகளை பார்ப்போம்.

"வழியில் ஒருவன்!
நில்! என்கிறான்.
சொல்! என்கிறான்.
"தம்பி!
உன் சாதி என்ன?"
நோ சொல்லு!
பாரி!
அவனுக்கு நோ சொல்லு!" என்று குறிப்பிட்டு உள்ளார்.

"அவ கறுப்பு!
இவ அழுக்கு!
விலக்கு!
தள்ளி வை!
இது பிரிக்கும் பேச்சு.
நோ சொல்லு ராணி!
நீ நோ சொல்லு!
பிரிக்கும் பேச்சுக்கு
நோ சொல்லு!"
"மரத்தில் பேய்!
வழியில் பேய்!
போகாதே! போகாதே!
இது வெட்டிக் கூச்சல்!
நோ சொல்லுராணி!
முட்டாள் பேச்சுக்கு
நீ நோ சொல்லு!" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications