ஆக்சன் ஸ்டார்ட்.. பறந்த “மெமோ” -வேலை நிறுத்தம் செய்யும் போக்குவரத்து தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்பு
சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கும் போக்குவரத்து தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டு தமிழ்நாடு போக்குவரத்துத் துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே அதிக தொழிலாளர்களை கொண்ட அரசு நிறுவனமாக உள்ளது அரசு போக்குவரத்து கழகம். 8 அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் என மொத்தம் 1.35 லட்சம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களுக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு 96 மாத அகவிலைப்படியை அரசு வழங்கவில்லை என்றும், கடந்த 13 மாதங்களாக ஓய்வு பெற்றோருக்கு பணப் பலங்கள் வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

அரசு இதனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் சிஐடியு உள்ளிட்ட 16 சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கின. கடந்த ஜனவரி 5 ஆம் தேதி அரசுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. முதல் 2 முறையும் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும் என தொழிற்சங்கங்கள் அறிவித்தன.
இதனை அடுத்து மீண்டும் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடங்கியது. தொழிற்சங்கங்களின் போராட்டம் காரணமாக உறுப்பினராக உள்ள போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பேருந்துகளை தனியார் ஓட்டுநர்களை வைத்து அரசு இயக்கி வருகிறது. இன்று 2 வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்து வரும் நிலையில் பல பகுதிகளில் 80 முதல் 90 சதவீதம் வரை பேருந்து இயக்கப்படுபதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும், அவர்கள் பொங்கல் பண்டிகையையும், பயணிகளையும் கருத்தில்கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே பணிக்கு வராத போக்குவரத்து தொழிலாளர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று வேலை நிறுத்தம் செய்து வரும் போக்குவரத்து ஊழியர்களுக்கு மெமோ அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கிறது போக்குவரத்துத் துறை.












Click it and Unblock the Notifications