புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு; குறையை சரிசெய்ய 45 நாட்கள் கெடு; மற்றொரு சான்ஸ் தந்த அரசு..!
சென்னை: சென்னை புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் உள்ள குறைகளை 45 நாட்களுக்குள் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் என, உரிய கட்டுமான நிறுவனத்துக்கு தமிழக அரசு கெடு விதித்துள்ளது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 1,920 வீடுகளை உள்ளடக்கிய 10 மாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ள நிலையில், தரமற்ற பொருட்கள் காரணமாக பல இடங்களில் பெயர்ந்து விழுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அரசியல் கட்சியினரும், துறை சார் அதிகாரிகளும் அந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

குடிசை மாற்று
ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான வீடுகளை கட்டிக்கொடுக்கும் நோக்கில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதல்முறையாக கடந்த 1970-ம் ஆண்டு திமுக அரசு இந்த வாரியத்தை உருவாக்கியது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை நான்கு லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு ஆண்டு
அந்த வகையில் சென்னை புளியந்தோப்பு கே.வி.பார்க் பகுதியில், கடந்த அதிமுக ஆட்சியின் போது 10 மாடி கட்டிடங்களை கொண்ட 1,920 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த கட்டுமானப் பணியை பி.எஸ்.டி. என்ற நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து கொடுத்தது. சுமார் ரூ.240 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட இந்த கட்டிடப் பணி, இரண்டு ஆண்டுக்குள் பல்லைக் காட்டிவிட்டது.

தரமற்ற பொருள்
சுவர் பகுதி கையில் தொட்டாலே பெயர்ந்து விழுவதாகவும், படிக்கட்டுகள் இடிந்து விழுவதாகவும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதற்கட்டமாக குடியேறிய 100 குடும்பத்தினர் புகார் கூறினர். மக்கள் உயிருடன் தொடர்புடைய விவகாரம் என்பதால், இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. அமைச்சர்கள், அதிகாரிகள், துறை சார்ந்த வல்லுநர்கள் என மாறி மாறி அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு நடத்தினர்.

பி.எஸ்.டி. விளக்கம்
மொத்த குடியிருப்பையும் இடிக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பாக பதறியடித்து விளக்கம் அளித்த பி.எஸ்.டி. கட்டுமான நிறுவனம், மிகவும் தரமான பொருட்களை கொண்டு கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடு குடியிருப்புகளை இரண்டாண்டு காலமாக பயனாளிகளுக்கு ஒதுக்கித் தராமல், கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி வைப்பதற்கான தற்காலிக மருத்துவமனையாக சென்னை மாநகராட்சி பயன்படுத்தியதாகவும், அவ்வாறு பயன்படுத்தும் போது மருத்துவ தளவாடங்களை படிக்கட்டுகள் வழியாக எடுத்துச்சென்ற போது சேதம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.

45 நாட்கள் கெடு
இந்தப் பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகி வரும் நிலையில், புளியந்தோப்பு கே.வி.பார்க் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடத்தில் உள்ள குறைகளை 45 நாட்களுக்குள் சீரமைத்துக் கொடுக்க வேண்டும் ஒப்பந்த நிறுவனமான பி.எஸ்.டி.க்கு தமிழக அரசு கெடு விதித்துள்ளது. இந்த 45 நாட்களுக்கு குறைகளை அரசு எதிர்பார்த்த படி அந்த நிறுவனம் சரி செய்து கொடுக்காவிட்டால் அடுத்தக் கட்ட நடவடிக்கை இன்னும் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications