இனி டிராஃபிக்கே இருக்காது.. சென்னை - திண்டிவனம் NH 32-வில் போக்குவரத்து நெரிசலை குறைக்க செம பிளான்!
சென்னை: சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கருங்குழி - பூஞ்சேரி இடையே 32 கி.மீ தூரத்திற்கு புதிய சாலை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக ரூபாய் 80 லட்சத்தில் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னை - திண்டிவனம் ஜி.எஸ்.டி ரோடு (NH 32) தினசரி கடும் போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையில் தினசரி 65,000 கார்களும், தாம்பரம் - திண்டிவனம் சாலையில் ஒரு லட்சம் கார்களும் நாள்தோறும் பயணிக்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கடுமையான போக்குவரத்து நெரிசல்
முக்கியமாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை சமயங்களில், சென்னைக்கு செல்லும்போதும், சென்னையில் இருந்து செல்லும்போதும், வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கித் தவிக்கும் நிலை காணப்படுகிறது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்வதற்கான நுழைவாயில் போன்ற பகுதி இது என்பதால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சூப்பரான திட்டம் கையில் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டுக்கு முன்பாக மதுராந்தகம் அருகே உள்ள கருங்குழியில் இருந்து உள்ளே திரும்பி, பூஞ்சேரி வழியாக கிழக்கு கடற்கரை சாலையுடன் கனெக்ட் ஆகும்.
கருங்குழி - பூஞ்சேரி
இந்த சாலையை விரிவுபடுத்தினால், மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இப்போது, சென்னையின் கிழக்கு பகுதிகளுக்குச் செல்வோரும் செங்கல்பட்டு தாண்டி செல்வதால், அப்பகுதி அதிக நெரிசலைச் சந்திக்கிறது. அதனால், இந்த ரூட்டை திருப்பி விட முடிவு செய்துள்ளனர்.
அதாவது தென் மாவட்டங்களில் இருந்து, சென்னையின் கிழக்கு பகுதிக்கு, நீலாங்கரை, கொட்டிவாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்களை கருங்குழியில் இருந்து ஈசிஆர் வழியாக திருப்பி விட்டால் நேரமும் மிச்சமாகும். இதன்மூலம் செங்கல்பட்டு - தாம்பரம் மார்க்கத்தில் போக்குவரத்து நெரிசலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

32 கி.மீ சாலை
செங்கல்பட்டு - மதுராந்தகம் இடையே அமைந்துள்ள கருங்குழியில் இருந்து சென்னை உள்வட்ட சுற்றுச்சாலைக்கு செல்லும் வகையில் அமைந்துள்ள 32 கிலோ மீட்டர் தூரத்தில் பல்வேறு இணைப்பு சாலைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், தற்போது இந்த ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. இதன் காரணமாக பெரிய வாகனங்கள் செல்வது சிரமம். அதிக வாகனங்களும் செல்ல முடியாது.
எனவே சாலையை அகலப்படுத்த வேண்டி உள்ளது. மேலும், பாலாற்றின் குறுக்கே பாலம் ஒன்று அமைக்க வேண்டும். மேலும் சில இடங்களில் புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தை ஆராய்ந்து, கருங்குழி - பூஞ்சேரி சாலை விரிவாக்க திட்டத்தை விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாத்தியக்கூறு டெண்டர்
இந்நிலையில், கருங்குழி - பூஞ்சேரி சாலையை சீரமைத்து விரிவுபடுத்த தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கருங்குழி - பூஞ்சேரி இடையே 32 கி.மீ தூரத்திற்கு புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் ரூபாய் 80 லட்சத்தில் டெண்டர் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications