பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை கைது செய்தது தமிழ்நாடு போலீஸ் தான்.. அர்ஜுன் சம்பத்துக்கு அரசு பதில்
சென்னை: தேசிய புலனாய்வு அமைப்புக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் ஆந்திரா காவல்துறை வந்து பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை கைது செய்துள்ளது என அர்ஜுன் சம்பத் தெரிவித்த நிலையில், இந்தத் தகவலுக்கு தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாத சந்தேக நபர் அபூபக்கர் சித்திக் மற்றும் அவரது கூட்டாளி முகமது அலி ஆகியோர் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 1995 முதல் பல வெடிகுண்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்தனர். இந்த கைது தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நடந்த பல பயங்கரவாத சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது.

அபுபக்கர் சித்திக் கைது
தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) அபூபக்கர் சித்திக்கை ஆந்திர பிரதேசத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் கண்டுபிடித்து கைது செய்தது. இவர் 2011-ல் முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையின் போது மதுரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் தொடர்புடையவர்.
அபூபக்கர் சித்திக் நாகூரைச் சேர்ந்தவர். இவர் பல வெடிகுண்டு வெடிப்புகள் மற்றும் வகுப்புவாத கொலைகளில் தொடர்புடையவர். குறிப்பாக, அபூபக்கர் சித்திக் 1995-ல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இந்து முன்னணி அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு, அதே ஆண்டில் நாகூரில் தங்கத்தின் மரணத்திற்கு காரணமான பார்சல் வெடிகுண்டு வெடிப்பு, 1999-ல் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் ஒருங்கிணைந்த வெடிகுண்டு வெடிப்பு, 2012-ல் வேலூரில் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை, மற்றும் 2013-ல் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகம் அருகே நடந்த வெடிகுண்டு வெடிப்பு போன்ற பல வழக்குகளில் தொடர்புடையவர்.
அர்ஜும் சம்பத் பதிவு
இந்நிலையில், அபுபக்கர் சித்திக் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், "தமிழ்நாட்டில் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல்களை நடத்திட சதித்திட்டமா?
30 வருடம் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை ஆந்திர போலீஸார் கைபற்றினர் - செய்தி
தமிழ்நாடு போலீசார் எங்க போனாங்க?
தேசிய புலனாய்வு அமைப்புக்கு NIA போலீசாருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காததால் ஆந்திராவிலிருந்து காவல்துறை வந்துள்ளது. இதைப்பற்றி தமிழக ஊடகங்கள் விரிவான செய்திகளோ! விவாதங்களோ நடத்தவில்லை!" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மறுப்பு
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம், அர்ஜுன் சம்பத்தின் பதிவு வதந்தி எனத் தெரிவித்துள்ளது. அதாவது, அபுபக்கர் சித்திக்கை கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை தான் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையே!
'30 வருடம் தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை ஆந்திர போலீஸார் கைபற்றினர். தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. இது தவறான தகவல்.
30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதி அபுபக்கர் சித்திக்கை ஆந்திரா மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் வைத்து கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு.
கைது நடவடிக்கைக்கு பிறகு அபுபக்கர் சித்திக் தங்கி இருந்த வீட்டில் ஆந்திர காவல்துறை நடத்திய சோதனையில் வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், தமிழ்நாடு காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வதந்தி பரப்பி வருகின்றனர். தவறான தகவலைப் பரப்பாதீர் !" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications