பாலியல் புகாரில் சிக்கிய போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து.. பின்னணி என்ன?
சென்னை: போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவை மாநில உள்துறை ரத்து செய்துள்ளது. பாலியல் புகாரில், டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், சஸ்பெண்ட் உத்தரவை உடனடியாக ரத்து செய்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
புகார்தாரரின் வேண்டுகோளின் படி, பாலியல் துன்புறுத்தல் புகார் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் குமார் மீது மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீஸ் டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவை மாநில உள்துறை ரத்து செய்துள்ளது.

மகேஷ் குமார் ஐபிஎஸ்
சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையராக பணியாற்றி வந்த மகேஷ் குமார் ஐபிஎஸ், போக்குவரத்து துறையில் பணிபுரிந்து வரும் பெண் காவலர் ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் விசாகா கமிட்டி விசாரணை செய்து, பெண் கொடுத்த புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதியானதன் அடிப்படையில் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகேஷ் குமார் மனைவி பேட்டி
சஸ்பெண்ட் செய்யப்பட்ட இணை ஆணையர் மகேஷ் குமார், மனைவி அனுராதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கும், என் கணவருக்கும் தொடர்பு இருக்கிறது. நான் அந்தப் பெண்ணை பல முறை நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் கண்டித்து வந்தேன். என் கணவரும் புகார் அளித்த பெண் காவலரும் தொடர்ந்து தனிமையில் சந்தித்து பேசி வந்தனர்" எனக் கூறினார்.
பாலியல் புகார் கொடுத்த பெண் காவலர் செங்கல்பட்டு அருகே மறைமலைநகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வரும் நிலையில், அதற்கு தன் கணவர் மகேஷ் குமாரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் கேட்டு வந்துள்ளார். என் கணவர் தர மறுத்த நிலையில், தற்போது அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். பெண் காவலர் தரப்பில் மட்டுமே விசாரணை செய்து உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பாக எங்களிடமும் விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்றார்.
சிசிடிவி ஆதாரம்
மேலும், சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையிலிருந்து மகேஷ் குமாரும், புகார் அளித்த பெண் காவலரும் வெளியே வரும் கண்காணிப்புப் கேமரா காட்சி ஆதாரங்களையும் காண்பித்தார். இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
சஸ்பெண்ட் உத்தரவு ரத்து
இந்நிலையில், மகேஷ் குமார் ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக ரத்து செய்து தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார். புகார்தாரரின் வேண்டுகோளின் படி, பாலியல் துன்புறுத்தல் புகார் சமரசம் மூலம் தீர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் குமார் மீது மேல் நடவடிக்கை எதுவும் தேவையில்லை என விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து டிஐஜி மகேஷ் குமார் சஸ்பெண்ட் உத்தரவை மாநில உள்துறை ரத்து செய்துள்ளது.












Click it and Unblock the Notifications