கருணாநிதி பிறந்த நாளை மாநில சுயாட்சி நாள் என பிரகடனம் செய்து கொண்டாட திருமாவளவன் வலியுறுத்தல்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதியை மாநில சுயாட்சி நாள் என பிரகடனம் செய்து கொண்டாட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜூன் 03 அன்று முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படுமென இன்று சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் அறிவித்திருப்பதை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் வரவேற்கிறோம்.
தமிழ், தமிழர், தமிழ்நாடு நலன்களுக்காக தனது இறுதிமூச்சு வரையில் பாடாற்றிய கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாளை அரசே கொண்டாடுவது அவருக்குச் செலுத்தும் நன்றியறிதலாகும். அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பன்முகத் திறன்கொண்ட கலைஞரின் பங்களிப்புகளிலேயே போற்றுதலுக்குரியது மாநில உரிமைகளுக்காக அவர் நடத்திய போராட்டங்களேயாகும்.
எனவே, மாநில சுயாட்சி உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக இந்தியாவிலேயே முதன் முதலில் போர்க்குரல் எழுப்பிய கலைஞரின் பிறந்தநாளை 'மாநில சுயாட்சி நாள்' அல்லது 'மாநில உரிமைகள் நாள்'என அறிவித்துக் கொண்டாட வேண்டுமென மாண்புமிகு முதல்வர் அவர்களை விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு தொல். திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.